கைமேல் பலன் கிடைக்க ஆவலா...கோயம்புத்துார் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள சிறுமுகை இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு அரிசி காணிக்கை கொடுப்பதாக இப்போதே வேண்டிக் கொள்ளுங்கள். பதிமூன்றாம் நுாற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோயில் சுவரில் மீன் சின்னம் உள்ளது. இங்குள்ள அனுமன் சிலைக்கு வயது 717. எட்டு அடி உயர பாறையில் ஆறடி உயரமும், ஐந்தடி அகலமும் கொண்டதாகவும், பக்தர்களை நேராக பார்ப்பது போலவும் அனுமன் சிலை செதுக்கப்பட்டுள்ளது. தலையின் மீதுள்ள வாலின் நுனியில் மணி உள்ளது. வலது கையில் சுதர்சன சக்கரமும், இடது கையில் சவுகந்திக மலரும் உள்ளன. திருமணம், குழந்தைப் பேறு வேண்டி சனிக்கிழமைகளில் சுவாமிக்கு துளசிமாலை சாத்தி வழிபடுகின்றனர். உடனடி பலன் பெற தினமும் கைப்பிடியளவு அரிசியை காணிக்கை செலுத்துகின்றனர். விநாயகர், செல்வமுத்துக்குமரன், பர்வதவர்த்தினி, ராமலிங்கேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள நந்தி சன்னதியைப் பார்க்காமல் பின்நோக்கி இருப்பதும், அதன் இடத்தில் விநாயகர் இருப்பதும் வித்தியாசமானது. விநாயகர், சூரியன், சந்திரன், ஆதிசேஷன், சிவலிங்கம், காமதேனு சிற்பங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றி ஏழு தீர்த்தங்கள் உள்ளன. எப்படி செல்வது கோயம்புத்துாரில் இருந்து மேட்டுப்பாளையம் 45 கி.மீ., இங்கிருந்து இடுகம்பாளையம் 10 கி.மீ., விசேஷ நாட்கள்: அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராமநவமி, புரட்டாசி சனி நேரம் : காலை 6:00 – இரவு 8:00 மணி.