மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது வழக்கம். பழமையை விடுத்து மனிதன் புதுமைக்குள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விழா இது. “இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற சிந்தனையை போகி வழங்குகிறது. அதே சமயத்தில் புதுமை என்ற பெயரால் மேலைநாட்டு நாகரிகத்தை விரும்புவது புதுமை அல்ல. ஒழுக்கத்தை மையமிட்டு வாழ்வதே நாகரிகம். நம் பாரம்பரியம், பண்பாடுகளை இழக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். போகியன்று வீட்டைத் துாய்மைப்படுத்துவர். சுவரில் சுண்ணாம்பு அடித்து செம்மண் பட்டை பூசுவர். வீடு முழுக்க மாக்கோலம் இடுவர். வீட்டை அழகுபடுத்துவது போல நம் உள்ளத்தில் நல்ல சிந்தனை மலர போகி வழிவகுக்கிறது.