பதிவு செய்த நாள்
15
ஜன
2021
12:01
தஞ்சாவூர்: தஞ்சையில் தொடர் மழையின் காரணமாக, பெரிய கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு, எளிமையான முறையில் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
உலக பிரசித்த பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மிகப்பெரிய நந்தியம் பெருமான் சிலை உள்ளது. இந்த நந்தியம் பெருமானுக்கு மாட்டு பொங்கல் தினத்தில் சுமார் ஆயிரம் கிலோ அளவிலான காய்கறி,பழங்கள்,இனிப்பு வகைக்கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வழிப்பாடு நடத்தப்படும். அதை போன்று நந்தியம்பெருமானுக்கு முன்பாக 108 பசுகள் வரிசையாக நிறுத்தி வைக்கபட்டு,பசுகள் மீது சந்தனம்,குங்குமம் பூசப்பட்டு மாலை,பட்டுதுணி போர்த்தப்பட்டு வழிபாடு நடத்தப்படும். ஆனால், இந்தாண்டு தொடர்மழை, கொரோனா தொற்று காரணமாக, இன்று காலை நந்தியம் பெருமானுக்கு பால்,மஞ்சள்,திரவயபொடி,தயிர் உள்ளிட்ட பொருளை கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர், நுாறு கிலோ காய்கறி,நுாறு கிலோ பழங்கள், குறைந்த அளவிலான மலர்கள் மட்டுமே கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு பசுவை கொண்டு கோ பூஜையும், தீபாராதனையும் நடத்தப்பட்டது. அலங்காரம் செய்யப்பட்ட காய்கறி,பழங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.