திருப்பதி; திருமலையில் இன்று முதல் சுப்ரபாத சேவை துவங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலையில் கடந்த ஒரு மாதகாலமாக தனுர் மாதத்தை ஒட்டி திருப்பாவை பாசுரங்கள் சுப்ரபாதத்திற்கு பதிலாக பாராயணம் செய்யப்பட்டு வந்தது. தனுர் மாதம் முடிவடைந்து தை மாதம் பிறந்துள்ளதால் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் சுப்ரபாத சேவை துவங்கப்பட உள்ளது.திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்திலும் வசந்த மண்டபத்திலும் தனுர் மாதத்தை ஒட்டி திருப்பாவை பாராயணம் நாலாயிர திவ்யபிரபந்தம் உள்ளிட்ட பாராயணங்களும் விஷ்ணு வில்வாரச்சனை பூஜைகளும் நடந்து வந்தன.அவையும் நேற்றுடன் நிறைவு அடைந்தன. இதையடுத்து சுமங்கலி பெண்களுக்கு மடம் சார்பில் மங்கல பொருட்கள் ஆண்டாள் திருவுருப்படம் தாம்பூலம் வழங்கப்பட்டது.