பதிவு செய்த நாள்
15
ஜன
2021
03:01
திண்டுக்கல் - திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமியம்மன், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், ரயிலடி சித்தி விநாயகர், வெள்ளை விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விவசாயிகள், பொதுமக்கள் புத்தாடை அணிந்து சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடுகளுக்கு முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. வழக்கமாக பொங்கல் நாளில் சுவாமி புறப்பட்டு நான்கு ரத வீதிகளை வலம் வருவது வழக்கம். கொரோனா தொற்று பிரச்னையால் நேற்று சிறப்பு அலங்காரத்தில் சன்னதி வளாகத்திற்குள் மட்டும் வலம் வந்தார். பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். எரியோடு குரும்பபட்டி வரதராஜப் பெருமாள் கோயில், அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிேஷகம், மூலவருக்கு கரும்புக்காப்பு சாற்றுதலுடன், ராஜ அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கொடைக்கானல்: கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனந்த கிரி பெரிய மாரியம்மன், குறிஞ்சி யாண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர், வரதராஜப் பெருமாள், பண்ணைக்காடு மயான காளியம்மன், சுப்ரமணிய சுவாமி, தாண்டிக்குடி பாலமுருகன், கானல் காடு பூதநாச்சியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.