காஞ்சி மகாபெரியவரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் தரையில் விழுந்து வணங்கிய பின், அவரால் நிற்க முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவி செய்தனர். அவருக்கு மூச்சு வாங்கியது. ‘‘என் உடல் பலவீனமாகி விட்டது சுவாமி. கொஞ்ச துாரம் நடந்தால் கூட மூச்சு வாங்குகிறது’’ என்றார் தளர்ந்த குரலில். சற்று நேரம் உட்காரச் சொன்ன பெரியவர், சுற்றியிருந்தவர்களிடம் பேசத் தொடங்கினார். ‘‘நம் வாழ்க்கையில் எல்லாம் ஒரு கணக்குத்தான். கணக்கு தப்பினால் உடல், மனநிலையில் பிரச்னை ஏற்படும். சாப்பிடுவது, துாங்குவது, எழுந்திருப்பது எல்லாம் சரியாக நடக்க வேண்டும். இதைப் போல மூச்சு விடுவதிலும் கணக்கு இருக்கிறது. அது மாற்றம் ஏற்பட்டாலும் சங்கடம் ஏற்படும். வியாபாரத்தில் வரவு, செலவு கணக்கு என்கிறார்களே? வருமானத்தை மீறி செலவு அதிகமானால் நஷ்டம் வரத் தானே செய்யும். மூச்சை உள்ளே இழுப்பதிலும், வெளிவிடுவதிலும் சீரான தன்மை வேண்டும். துாக்கத்தில் கூட மூச்சு சரியாக இருக்க வேண்டும். ஆனால் சுவாசத்தை நாம் யாரும் பொருட்படுத்துவது கிடையாது. கோபம், கவலை அதிகமாகும் போது சுவாசத்தின் போக்கு தாறுமாறாகி விடும். கோபம், டென்ஷன் தரும் விஷயங்களிலிருந்து விலகி நிற்பது அவசியம். சுவாசம் சீராக இருந்தால் நோய்கள் அணுகாது. யோகாசனம், பிராணயாமம் பயிற்சிகள் சுவாசத்தை சீர்படுத்த உதவுகின்றன. தியானம் செய்யும் போது கவனித்துப் பாருங்கள். மூச்சு ஒரே சீராக இருக்கும். படபடப்போ, பரபரப்போ சிறிதும் இருக்காது. இதயத் துடிப்பும் சீராக இருப்பதை அப்போது உணரலாம். அதிகாலையில் சிறிது நேரம் மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்’’ என்றார். அனைவருக்கும் ஆசி வழங்கி குங்குமப் பிரசாதம் கொடுத்தார் மகாபெரியவர். சுவாசம் சீரானது போல அனைவரும் மகிழ்ந்தனர்.