திருநெல்வேலி ஆயிரத்தம்மன் கோயிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை எருமையை பலியிடுவது வழக்கம். ஒரே வெட்டில் கழுத்து துண்டாக்கும் நபருக்கு தங்க சங்கிலியும் பரிசளிப்பர். இதைக் கேள்விப்பட்ட கிருபானந்த வாரியார், கடவுளின் பெயரால் உயிர்ப்பலி கூடாது என வலியுறுத்தினார். ‘காலம் காலமாக அம்மனுக்கு நடத்தப்படும் சடங்கை நிறுத்துவதா? இப்படி ஒரு யோசனை சொன்ன வாரியாரையும் பலியிடுவோம்’ என விழாக்குழுவினர் கொதித்தனர். இது பற்றி காவல்துறையிடம் புகார் செய்ய, கோயிலைச் சுற்றி ஐந்து கி.மீ., துாரத்திற்கு ஆள் சேரக் கூடாது என போலீசார் உத்தரவிட்டனர். தடையை மீறி விழாக்குழுவினர் வர, போலீசார் அவர்களை கைது செய்தனர். அன்று இரவு திருப்புகழ் பாடல்கள் பாடியபடி வாரியார், ஒரு எருமை மாட்டுடன் அம்மன் கோயிலை வலம் வந்தார். கோயிலை வலம் வந்த அந்த மாடு செய்த புண்ணியத்தை என்னவென்பது?