பதிவு செய்த நாள்
18
ஜன
2021
11:01
அந்தக் காலத்தில் நடந்த மாட்டுப் பொங்கல் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ! அந்த மாட்டுப் பொங்கல்.
மாட்டுப்பொங்கல் அன்று மாலையில் ஊரிலுள்ள மாடுகள் எல்லாம் மந்தைவெளியில் கூடும். ஊர்ப்பெரியவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று அரிசி, வெல்லம், தேங்காய், தயிர், வாழைப்பழம், சீயக்காய், எண்ணெய் வாங்கி வருவர். மந்தையின் ஒதுக்குப்புறத்தில் சேகரித்த அரிசியைக் கொண்டு பொங்கல் இடுவர். பிறகு தயிர், வாழைப்பழம், தேங்காய், வெல்லத்தை பொங்கலுடன் கலக்குவர். பொங்கல் குவிக்கப்பட்டு சிவலிங்கம் போல் காட்சி தரும். குவிக்கும் போது, வாயில் துணி கட்டி கொள்வர். காரணம் எச்சில் தெறித்து பிரசாதத்தின் புனிதம் கெடக்கூடாது என்பதற்காக.
மந்தையின் மேற்கு புறத்தில் மண்ணால் கட்டிய மேடை இருக்கும். அதில் வெள்ளைத் துணியை விரித்து, அதன்மேல் வாழை இலைகளை வரிசையாக வைத்து பொங்கலைப் படைப்பர். அந்த மேடைக்குத் ‘திட்டாணி’ என்று பெயர். அதற்கு நேராக, கிழக்கே ‘கள்ளி வட்டம்’ என்னும் அமைப்பு இருக்கும். அங்கே கிளை கிளையாகப் படர்ந்திருக்கும் திருகுக் கள்ளிச் செடியை ஒடித்து வைத்து, அவற்றில் எண்ணெய்யில் நனைக்கப்பட்ட திரிகளைச் செருகி வைப்பர். மேடையில் ஓரத்தில் பெரிய சட்டியில் சாம்பிராணி புகைந்து கொண்டிருக்கும். இவற்றுக்குப் பாதுகாவலாக ‘திட்டாணிக் காவலர்’ ஒருவரை நியமிப்பர்.
பொங்கலை பரப்பி வைத்திருக்கும் மேடைக்கும், கள்ளி வட்டத்துக்கும் நடுவே மாடுகள் நிறுத்தப்படும். அவற்றின் வாலில் இருந்து சிறிதளவு முடியை நறுக்கி எடுப்பர். அதன்பின், அவற்றின் முதுகில் கொஞ்சம் எண்ணெய் தடவி, சீயக்காய்த் துாளைத் தேய்ப்பர். பிறகு தண்ணீர் நிரம்பிய செம்புகளில், மாவிலையை நனைத்து மாடுகளை குளிப்பாட்டுவர்.
பின்னர் மாடுகளுக்கு பொங்கலை ஊட்டுவர். மாவிலைகள், ஆவாரம்பூ, பிரண்டை, பீளைப்பழம் ஆகியவற்றை கோரைப்புல் கொண்டு மாலையாகக் கட்டி மாடுகளின் கழுத்தில் அணிவிப்பர். கற்றாழை நாரால் ஆன குஞ்சங்களை மாடுகளின் கொம்பு, கழுத்து, கால்களில் கட்டுவர்.
ஒருவர் கையில் தீச்சட்டி ஏந்தி நிற்பார். மற்றொருவர் சேகண்டி (வெண்கல இசைக் கருவி) அடிப்பார். இன்னொருவர் திருச்சங்கு எடுத்து ஊதுவார். ஒருவர் நீர் நிறைந்த செம்பில் மாவிலையை வைத்தபடி நிற்பார். குரல்வளம் மிக்க ஒருவர் மகாலட்சுமியின் அம்சமான மாடுகளைப் பற்றி பாடுவார். அதை மற்றவர்கள் பின்பாட்டாக பாடுவர். அனைவரும் ஒற்றுமையுடன் மாடுகளைச் சுற்றி வந்து வழிபடுவர். நிறைவாக ‘பொங்கலோ பொங்கல்’ என வாழ்த்துவர்.
இந்த நிகழ்வின் போது பெண்கள் வீட்டில் இருப்பர். அவர்களின் காதில் ‘பொங்கலோ பொங்கல்’ என்ற வாழ்த்து சத்தம் கேட்டவுடன், தேங்காய், பழம், பலகாரங்களை தெய்வத்தின் முன் படைப்பர். இந்த நிகழ்ச்சி மாலையில் துவங்கி நள்ளிரவு வரை தொடரும். அதுவரை யாரும் துாங்க மாட்டார்கள்.
இதன் பிறகு மாடுகள் மந்தையில் இருந்து வீடுகளுக்கு திரும்பும். அப்போது திட்டாணியில் இருக்கும் பிரசாதப் பொங்கல் ஆளுக்கு ஒரு கவளம் பாத்திரத்தில் கொடுப்பர்.. ‘பெருமாள் சோறு’ என்று இதைச் சொல்வர். வீட்டு வாசலில் சிறிது வைக்கோலை கொளுத்தி விட்டு, உலக்கை ஒன்றை வாசலின் குறுக்காக தரையில் வைப்பர். இதனால் மாட்டுக்கு திருஷ்டி, வியாதி வராமல் தடுக்கப்படும். கால்நடைகள், விளைச்சல் பெருகும்.