பதிவு செய்த நாள்
20
ஜன
2021
02:01
திண்டுக்கல் : பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பழநியில் தைப்பூச விழா நாளை ஜன.21 ல் துவங்கி ஜன.31 வரை நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். மதுரை, சிவகங்கை, விருதுநகரில் இருந்து வரும் பக்தர்கள் திண்டுக்கல் வழியாக வருகின்றனர். கோவை, உடுமலை, தாராபுரம் பக்தர்கள் ஒட்டன்சத்திரம் வழியாக வருகின்றனர்.
இந்த பக்தர்களுக்காக திண்டுக்கல் - பழநி ரோட்டோரம் பேவர் பிளாக் கற்களால் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் நெடுஞ்சாலையிலேயே ஓரமாக நடந்து செல்கின்றனர். சிலர் இரவு பயணம் மேற்கொள்கின்றனர்.தற்போது காலநிலை மாற்றத்தால் அதிகளவில் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் இரவு நேரத்தில் ரோடு, வாகனங்கள் எளிதில் புலப்படுவதில்லை. எனவே, இரவு நேர பயணத்தை தவிர்த்து பகலில் பாதயாத்திரை செல்ல வேண்டும். கூட்டமாக செல்லமால் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் செல்ல வேண்டும்.தவிர்க்க முடியாமல் இரவு நேர பயணம் மேற்கொள்வோர் சிவப்பு, மஞ்சள் நிற ஒளிரும் பட்டைகளை மேலாடை, தோள் பை, வாக்கிங் ஸ்டிக் மீது ஒட்ட வேண்டும். அப்போது வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க முடியும். மேலும் உடைமைகளை எடுத்து செல்லும் வாகனங்கள் முன்புறம் வெள்ளை, பின் பகுதியில் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். இதன் மூலம் விபரீதம் நடப்பதை தடுக்கலாம் என, பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.