பதிவு செய்த நாள்
20
ஜன
2021
03:01
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவலால், ரத்து செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேர்திருவிழாவை, பல்வேறு போராட்டங்களுக்கு பின், கட்டுப்பாடுடன் நடத்திக்கொள்ள, மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது.
இதையடுத்து கோவிலில், நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து திருத்தேர் கால் போடும் பணி, மாலையில் கிராமசாந்தி நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம், 12:00 மணிக்கு தைப்பூச விழா கொடியேற்றம் நடைபெற்றது. இரவில் பல்லக்கு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, அதை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும், அஷ்ட பலிகளுக்கும் காப்பு கட்டப்படுகிறது. 27ம் தேதி இரவு வசந்த உற்சவ திருக்கல்யாண வைபவம், 28ம் தேதி காலை, 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருத்தேர் உலா வழக்கம்போல் இரண்டு நாட்கள் நடந்து, 29ம் தேதி மாலை நிலை சேர்கிறது. மகா தரிசனம் பிப்.,1ம் தேதி காலை நடக்கிறது. இதை தொடர்ந்து அன்றிரவு சுவாமி திருவீதி உலா நடந்து, 11:00 மணிக்குள் சுவாமி திருக்கோவில் வந்தடையும். பிப்.,2ம் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன், தைப்பூச விழா நிறைவடைகிறது.