நிறங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை எழுந்தது. முதலில் எழுந்த நீலம் மற்றவரை அலட்சியமாக பார்த்தபடி, ‘‘உலகமே என்னுடைய நிறத்தால் ஆனது. கடல், வானம் எங்கும் என் நிறமே. நானே உயர்ந்தவன்.’’ என்றது. அடுத்ததாக சிவப்பு,‘‘ எல்லா உயிர்களின் உடம்பில் ஓடும் ரத்தம் என் நிறமே. ஆபத்து காலத்தில் அபாய எச்சரிக்கை செய்ய என்னையே பயன்படுத்துவர்’’ பரபரப்புடன் பச்சை, ‘‘உலகமே என்னைத் தான் விரும்பும். வளத்தை குறிப்பது என் நிறமே.’’ என்றது. தாமதமாக வந்த வெள்ளையோ, ‘‘ வெள்ளைக்கு இல்லை கள்ளத்தனம். துாய்மை என்ற எண்ணம் என்னிலிருந்து எழுந்தது. எனக்கு என தனிமதிப்பு உண்டு’’ என்றது. இப்படி நிறங்கள் தங்களின் பெருமைகளை அடுக்கிக் கொண்டு செல்ல, ஆண்டவரிடம் முறையிட்டன. அப்போது வானில் மின்னலுடன் இடி முழங்கியது. பயந்து போன நிறங்கள் ஒன்றோடொன்று இணைந்து வானவில்லாக மாறியது. ‘‘நீங்கள் சண்டையிடுவதில் என்ன பெருமை இருக்கிறது? ஒருவரோடு ஒருவர் இணைந்து இருப்பதில் எத்தனை அழகு. எப்போதும் சமாதானமாக வாழுங்கள்’’ என்றார் ஆண்டவர். பிறரோடு இணைந்து இயங்குவது தான் பெருமை என்பதை உணருங்கள்.