எழுத்தாளர், நாடகக் கலைஞராக இருந்தவர் கூத்தபிரான். கூத்தபிரானின் ‘மூவண்ணக் கொடி உயர்த்துவோம்!’ என்னும் சிறுவ்ர நாடகத்தை மகாபெரியவர் பார்க்க விரும்புவதாக காஞ்சிபுரம் மடத்தில் இருந்து கடிதம் வந்தது. மகாபெரியவர் தங்கியிருந்த ஓரிக்கை கிராமத்திற்கு நாடகத்தில் நடித்த பதினாறு குழந்தைகளுடன் கூத்தப்பிரான் மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். மகாபெரியவரின் முன்னிலையில் நாடகம் நடந்தது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலத்தில் நிகழும் கதை அது. அதில் பள்ளிச் சிறுவர்கள் சிலர், கொடிக்கம்பத்தில் இருந்து யூனியன் ஜாக் கொடியை இறக்கி, நம் தேசியக் கொடியை பறக்க விடுகின்றனர். இதனால் கோபம் அடைந்த ஆங்கிலேய அதிகாரிகள் சிறுவர்களை மிரட்டுவதாக கதை தொடரும். இந்த நாடகத்தை ரசித்த மகாபெரியவர் பொதுவாக கதர், காவியாடை விரும்பி அணிந்தவர்; இந்தியா சுதந்திரம் அடைந்தால் மட்டுமே நமது கலாசாரம், பண்பாட்டை காப்பாற்ற முடியும் எனக் கருதியவர். காந்திஜியைப் பெரிதும் மதித்தவர்.
நாடகம் முடிந்ததும் உணர்ச்சிபூர்வமாக நடித்த சிறுவர்களை தனித்தனியாக பாராட்டியதோடு பிரசாதம் கொடுத்தார். கூத்தபிரானுக்கு ‘சன்மார்க்கப் பிரசார மணி’ என்னும் விருது வழங்கினார் மகாபெரியவர்.
பிறகு கூத்தபிரான் என்னும் புனைபெயருக்கான காரணத்தைக் கேட்டறிந்தார். தனக்கு பெற்றோர் இட்ட பெயர் நடராஜன் என்றும். அப்பெயரில் பலரும் இருப்பதால் நடராஜப்பெருமானுக்கு உரிய ‘கூத்த பிரான்’ என்னும் புனைப்பெயரை வைத்ததாகவும் தெரிவித்தார் கூத்தபிரான். எந்தக் கோயிலில் கூத்தபிரானுக்கு சன்னதி இருக்கிறது தெரியுமா என மகாபெரியவர் கேட்க, வைத்தீஸ்வரன் கோயிலில் ‘கூத்தபிரான் சன்னிதி’ என எழுதியிருந்ததை பார்த்த பின்னரே இப்பெயர் வைத்ததாக தெரிவித்தார். அதைக் கேட்டதும் மகாபெரியவரின் முகம் மலர்ந்தது. எங்கு வேலை செய்கிறாய் எனக் கேட்ட போது, வானொலியில் குழந்தைகள் பிரிவில் பணிபுரிவதாக தெரிவித்தார். ‘‘ரொம்ப நல்லது! பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை. எனவே குழந்தைகளைப் பண்படுத்தும் நல்ல காரியத்தை அங்கிருந்து தொடர்ந்து செய்’ என்று சொல்லி குங்குமப் பிரசாதம் கொடுத்து ஆசியளித்தார். தாம் பெற்ற எல்லா விருதுகளையும் விட மகாபெரியவரால் வழங்கப்பட்ட ‘சன்மார்க்கப் பிரசார மணி’ என்னும் பட்டத்தை வாழ்நாள் கவுரவமாக கூத்தபிரான் கருதினார்.