பதிவு செய்த நாள்
26
ஜன
2021
09:01
வடவள்ளி: மருதமலையில், தைப்பூசத்தன்று பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே, மலைக்கு அனுமதிக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நாளை, தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தைப்பூசத்தன்று, பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே, மலைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில்," நாளை (27ம் தேதி) இரவு, 8:00 மணி முதல் 28ம் தேதி காலை, 7:00 மணி வரை, கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். காலை, 7:00 மணிக்கு மேல், பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தைப்பூசத்தன்று, பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே, அடிவாரத்திலிருந்து மலைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படும். மற்றவர்கள், படிக்கட்டுகள் வழியாகவும், தேவஸ்தான பஸ்கள் மூலமாகவும் செல்லலாம்,"என்றார்.