சாகாவரம் பெற்ற தானகாசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழித்து, தேவர்களைக் காக்கும் பொறுப்பை சிவன் காளியிடம் ஒப்படைத்தார். கோர வடிவெடுத்த காளி, அசுரனைக் கொன்றாள். ஆனாலும் அவளின் ஆவேசம் தீரவில்லை. உயிர்கள் அனைத்தும் காளியைக் கண்டு அஞ்சின. அப்போது சிவன் கட்டளைப்படி, மாய பாலகன் ஒருவன் காளியின் முன் குழந்தை வடிவில் பசியால் அழத் தொடங்கினான். அதைக் கேட்ட காளிக்கு தாய்மை குணம் மலர்ந்தது. மார்போடு அணைத்துப் பாலுாட்டினாள். பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்துக் குடித்தது அக்குழந்தை. அதன் பின் காளி சாந்தமானாள். அக்குழந்தையே வளர்ந்து ‘க்ஷேத்திர பாலகர்’ என்னும் பெயர் பெற்றார். சிவன் கோயிலின் காவல் தெய்வம் க்ஷேத்திர பாலகர். ‘கோயிலைக் காப்பவர்’ என்பது இதன் பொருள்.