பிரம்மா ஒருமுறை பூலோகத்தில் யாகம் ஒன்றை நடத்த வான்வழியே வந்த போது, குறிப்பிட்ட இடத்திற்கு மேலே பறக்கும் போது, அவரின் கையில் இருந்த தாமரை மலர் கீழ் நோக்கி வளைந்து பூமியைத் தொட்டது. அங்கே நீரூற்று உண்டானது. புஷ்பத்தால் (மலர்) உண்டானதால் தலம், தீர்த்தத்திற்கு ‘புஷ்கர்’ என்று பெயர் உண்டானது. யாகம் நடத்திய பிரம்மாவுக்கு புஷ்கரில் கோயில் கட்டப்பட்டது. காயத்ரி தேவியுடன் வீற்றிருக்கும் இவருக்கு ஆமை வாகனமாக உள்ளது. கோயிலுக்கு அருகிலுள்ள குன்றில் சரஸ்வதி கோயில் உள்ளது. குரு பரிகாரத் தலமான இங்கு ராஜஸ்தான் பாணியில் பிரம்மா தலைப்பாகையுடன் காட்சி தருகிறார். இங்கு வரும் பக்தர்களின் தலையெழுத்து பிரம்மாவின் அருளால் மாறிவிடும். ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்னும் இத்தலம் உள்ளது.