பதிவு செய்த நாள்
28
ஜன
2021
09:01
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன், பத்து நாள் தைப்பூச திருவிழா துவங்கியது. முதல், 6 நாட்கள், காலை, மாலையும், யாகசாலை பூஜைகளும், திருவீதியுலாவும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, 27ம் தேதி இரவு முதல், 28ம் தேதி காலை, 7:00 மணி வரை, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பமாட்டார்கள், தைப்பூச தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
அதன் அடிப்படையில், தைப்பூச தினமான இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சுப்ரமணிய சுவாமி, முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேரோட்டம் நடத்த செய்யப்பட்ட நிலையில், தைப்பூசத் திருவிழாவில் மற்றொரு முக்கிய நிகழ்வான, திருக்கல்யாண உற்சவம் அதிகாலை, 3:00 முதல் 5:30 வரை நடந்தது. விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கலச பூஜை, பட்டு வஸ்திரம் சாத்துதல், தாரை வார்த்து கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 5:30 மணிக்கு, வள்ளியுடன், சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதன்பின், 6:00 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன், வெள்ளை யானை வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவையின் பல்வேறு பகுதியில் இருந்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும், பக்தர்கள் பாதயாத்திரையாக மருதமலைக்கு வந்து முருகனை தரிசித்தனர். தைப்பூசத்தையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலையில் குவிந்தனர்.