பதிவு செய்த நாள்
28
ஜன
2021
11:01
கம்பம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில், கடந்தாண்டு, 269 கோடி ரூபாயாக இருந்த வருமானம், இந்தாண்டு, 92 சதவீதம் சரிந்து, 21 கோடி ரூபாயாக குறைந்தது. இதையடுத்து, ’இழப்பை சரிக்கட்ட வசதியான பக்தர்களிடம் உதவி கேட்கவும், வங்கிகளில் கடன் வாங்கவும் பரிசீலித்து வருகிறோம்’ என, தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் மகரவிளக்கு, மண்டல பூஜைகள், நவம்பர் முதல், ஜனவரி இரண்டாவது வாரம் வரை நடக்கும். கடந்தாண்டு மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையின் வருமானம் 269.17 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு, கொரோனாவால், பக்தர்கள் குறைவாகவே அனுமதிக்கப்பட்டனர். எனவே வருவாய் கடுமையாக சரிந்தது. வெறும், 21.17 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. சபரிமலை தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள, 1248 கோவில்கள், சபரிமலை வருவாயை வைத்து தான் நிர்வாகம் செய்யப்படுகிறது.மாத சம்பளம் மற்றும் இதர கோவில்கள் பராமரிப்பிற்காக மட்டும், 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஏற்கெனவே, கேரள அரசு, சபரிமலை கோவிலுக்கு, 70 கோடி ரூபாயை வழங்கியது. தற்போது கடும் நிதிநெருக்கடியில் இருப்பதால், கூடுதல் நிதி வழங்குமாறு, மாநில அரசை தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், ’வசதியான பக்தர்களிடம் உதவி கேட்கவும் கோவிலுக்கு, பக்தர்கள் வழங்கிய உபய பொருட்களை வங்கிகளில் வைத்து கடன் பெறவும் ஆலோசித்து வருகிறோம்’ என, தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.