சிறுவன் ராமலிங்கத்திற்கு (வள்ளலார்) அவரது அண்ணனான சபாபதி குருநாதராக இருந்து பாடம் நடத்தி வந்தார். ராமலிங்கத்திற்கு ஆர்வம் இல்லை. அடிக்கடி கந்தகோட்டம் முருகன் கோவிலுக்குச் செல்வார். பாடசாலையில் சேர்த்தால் நண்பர்களோடு சேர்ந்து படிக்க வாய்ப்பிருக்கும் என எண்ணி சென்னையில் உள்ள பாடசாலையில் சேர்த்தார். அங்கு ஆசிரியர், ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்னும் உலகநீதிப் பாடலை நடத்தினார். இதைக் கேட்ட சிறுவன், “இதென்ன.... பாட்டின் ஆரம்பமே ‘ஓதாமல்’ என்று எதிர்மறையாக இருக்கிறதே?” என்றான். “பாடத்தில் ஆர்வம் இல்லாமல் எதிர்வாதம் பேசுகிறாயா? உனக்கு தெரிந்தால் பாடு பார்ப்போம்” என்று கோபத்தில் கத்தினார் ஆசிரியர். ராமலிங்கமும் இனிய குரலில்,“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்” என்றான். வியந்து போன ஆசிரியர், “யார் எழுதிய பாட்டு இது?” என்று கேட்டார். “நான் எழுதியது” என்றான் பணிவுடன். தெய்வ அருள் பெற்ற குழந்தை இது என்பதை உணர்ந்து ஆசிரியர் வாழ்த்தினார்.