படிப்பில் அக்கறை இல்லாத ராமலிங்கம் மீது அவரது அண்ணன் சபாபதிக்கு கோபம் உண்டானது. அதனால், மனைவியிடம், “படிக்க எண்ணம் இல்லாத ராமலிங்கத்திற்கு உணவு கொடுக்காதே” என்று கட்டளையிட்டிருந்தார். அன்று இரவு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்குச் சென்ற ராமலிங்கம், இரவு வீட்டுக்கு வர நீண்ட நேரமானது. வீட்டுக்கு வந்த போது கதவு தாழிட்டிருந்தது. வெளியிலுள்ள திண்ணையில் ராமலிங்கம் படுத்துக் கொண்டார். பசியாக இருந்ததால் துாக்கம் வரவில்லை. அப்போது ராமலிங்கத்தின் சகோதரியான உண்ணாமுலையின் கோலத்தில் வடிவுடையம்மனே வந்து அன்னமிட்டு மறைந்தாள். பசியாறிய ராமலிங்கம் நிம்மதியாக படுத்தார். நள்ளிரவில் விழித்த அண்ணியார் பாப்பாத்தியம்மாள், நாத்தனார் உண்ணாமுலையிடம் திண்ணையில் துாங்கும் ராமலிங்கத்தை சாப்பிட வரும்படி கூறினாள். அப்போது ராமலிங்கம்,“அக்கா! கோயிலில் இருந்து வந்ததும் நீ தானே உணவு கொடுத்தாய். நான் சாப்பிட்ட இலை கூட அங்கு கிடப்பதைப் பார்” என்றார். அதன் பின்னரே திருவொற்றியூர் வடிவுடையம்மனே உணவிட்ட உண்மை புரிந்தது.