முஃமின் என்ற சொல்லுக்கு ‘நம்பிக்கையாளர்’ என்பது பொருள். யார் நம்பிக்கையாளர் என்பதற்கு விளக்கம் அளிக்கிறார் நாயகம். ‘‘ உங்களுக்கு விருப்பமான ஒன்று உங்களின் சகோதரனுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தால் ஒழிய நீங்கள் மன உறுதியும், நம்பிக்கையும் கொண்டவராக மாட்டீர்கள். உயிர்கள் எவன் கைவசத்தில் இருக்கிறதோ, அந்த இறைவன் மீது சத்தியமாக இந்த எண்ணம் இருக்க வேண்டும்’’ என்கிறார். பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என சொல்வதில் பயனில்லை. இறைவன் மீது ஆணையாக யார் ஒருவர் மற்றவரின் நன்மையை விரும்புகிறாரோ, அவரே உண்மையான நம்பிக்கையாளர் ஆவார்.