ஆபிரகாம் என்பவர் தன் மகனின் திருமணத்தின் போது ஜெபம் செய்து ஆண்டவரை அழைத்தார். நிச்சயமாக ஆண்டவர் வருவார் என நம்பிக்கையுடன் காத்திருந்தார். குறிப்பிட்ட இடத்தில் மற்றவர்களை உட்கார விடக்கூடாது என பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் ஆண்டவர் வரவில்லை. இறுதியில் மிஞ்சிய உணவை சாப்பிட ஏழைகள் வந்தனர். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் யாரும் அமராதபடி பணியாளர்கள் விரட்டினர். அழுக்கு படிந்த ஆடையுடன் சிறுவன் ஒருவன் அந்த இடத்தில் அமர்ந்தான். கோபமடைந்த பணியாளர் ஒருவர் சிறுவனின் கையைப் பிடித்து இழுத்தார். அதை பார்த்த ஆபிரகாம், ‘‘ பரவாயில்லை சிறுவனை சாப்பிட அனுமதிக்கலாம். ஆண்டவர் வந்தால் வேறு இடத்தில் உட்காரச் சொல்வோம்’’ என்றார். சிறுவனும் வயிறு நிரம்ப சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் எழுந்தான். அப்போது ‘‘தம்பி... நீ யார்?’’ எனக் கேட்டார் ஆபிரகாம். ‘‘மரியாளின் மகன்’’ என சிரித்தபடி கூட்டத்திற்குள் ஒளிந்தான். ஏழைகளுக்கு உதவுதல் என்பது ஆண்டவருக்கு உதவியதற்கு சமம் என்பதை அவரது உள்ளுணர்வு உணர்த்தியது. . நன்மை செய்யும் ஆற்றல் இருந்தும் பிறருக்கு உதவாமல் இருக்காதே என்கிறது பைபிள்.