பதிவு செய்த நாள்
13
பிப்
2021
07:02
அசுவனி :
ராசிநாதனின் சாதகமான நிலை கூடுதல் வலுவினைத் தந்தாலும் ஒரு சில நேரங்களில் அவசரப்பட்டு செய்யும் காரியங்களால் சிறிய தடங்கல்கள் உண்டாவதைக் காண்பீர்கள். இவ்வாறு தடைகள் உண்டான பிறகு மதியூகத்துடன் செயல்பட்டு அத்தடையைத் தாண்டும் முயற்சிகளை கையாளுவீர்கள். வந்த பின்பு யோசிப்பதை விட வரும் முன் காப்பது நல்லது என்பதை புரிந்துகொண்டு செயல்பட்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். இந்த மாதத்தில் பல வகைகளிலும் தனலாபம் உண்டாகும். ஆயினும் அதற்காக கடுமையான அலைச்சலையும் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். ஆயினும் வேலை பளுவின் காரணமாக குடும்பத்தினரோடு செலவழிக்கும் நேரம் குறையும் என்பதால் மனதில் லேசான விரக்தி தலைதூக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். மாதத்தின் இறுதியில் திடீர் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முயற்சிப்பீர்கள். அவசரப்பட்டு பேசும் வார்த்தைகளால் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். வாழ்க்கைத்துணையின் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி காண்பீர்கள். பெண்களால் நன்மை உண்டாகும். தகப்பனார் வழி சொத்துக்களில் பிரச்னைகள் தொடரும். தொழில் ஸ்தானம் நன்றாக வலுப்பெற்றிருக்கும் இவ்வேளையில் ஓய்வினை எதிர்பாராது அதிக பட்ச உழைப்பினை வெளிப்படுத்தி நல்ல ஆதாயம் காண்பீர்கள். வெள்ளை மனதுடன் பழகி வரும் உங்களை ஒரு சிலர் ஏமாற்ற முயற்சிக்கக்கூடும். அடுத்தவர்களுக்காக பொறுப்பேற்று செய்யும் காரியங்களால் சிறிது சிரமத்தினை சந்திக்க நேரிடும். நற்பலன்களைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீ சங்கர நாராயணர்
சந்திராஷ்டமம் : மார்ச் 4, 5
பரணி : இந்த மாதத்திய கிரக நிலை நீங்கள் மனதில் நினைக்கும் விஷயங்களை செயல்முறையில் நடத்திக் காட்டும் திறமையை உங்களுக்குள் உருவாகச் செய்யும். செயல்முறையில் வேகம், விவேகத்தோடு ஒருவித கவுரவத் தன்மையையும் காணலாம். செய்வதால் பல வழிகளிலும் பொருள் வரவு இருந்து வரும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு இருந்து வந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. உடன்பிறந்தோரின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். சகோதரிக்கு பிரதிபலன் கருதாது உதவி செய்ய முற்படுவீர்கள். செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களில் மாற்றம் செய்ய முற்படுவீர்கள். அண்டை அயலார் வீட்டுப் பெண்களால் ஒரு சில தொல்லைகள் உண்டாகலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. வண்டி, வாகனங்களில் மாற்றம் செய்ய விரும்புவோர்க்கு அதற்கான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் வாழ்வியல் நிலை உயரும். அவர்களின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும் வகையில் அமையும். உடல்நிலை சீராக இருந்து வரும். அயல்நாட்டு நண்பர்களிடமிருந்து உபயோகமான தகவல்கள் வந்து சேரும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் மூலம் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வெளிநாட்டுப் பயணத்திற்காக காத்திருப்போருக்கு காலம் கனிந்து வரும். செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சித்தாலும் கவுரவம் கருதி செய்யும் செலவுகள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக ஒருவித மந்தமான நிலையை உணர்வீர்கள். வியாபாரம் மெதுவாக நடப்பது போலத் தோன்றினாலும் தனலாபம் நன்றாக இருக்கும். இந்த மாதத்தில் சுகமாக ஓய்வு எடுப்பதில் இன்பம் காண்பீர்கள். சிந்தையில் நினைத்ததை உடனுக்குடன் செயலாற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். தனிப்பட்ட முறையில் உங்களது கவுரவம் உயருகின்ற மாதமிது.
பரிகாரம் : ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி
சந்திராஷ்டமம் : மார்ச் 5
கார்த்திகை 1ம் பாதம் : இயற்கையில் அவசரபுத்திக்காரர்களாகிய உங்களுக்கு இந்த மாதத்தில் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்கும். ஆயினும் அடுத்தவர்களுக்கு முன்பாக நாம் செய்து முடித்துவிட வேண்டும் என்ற அவசரம் உங்கள் செயலில் வெளிப்படும். பார்க்கும் பொருட்களையெல்லாம் அடைந்துவிட வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகும். அளவுக்கதிகமாக ஆசைப்படுவது தவறு என்பதை உணர்ந்துகொண்டு செயல்படுவது நல்லது. பிப்ரவரி 19ம்தேதி முதல் சிறப்பான பொருள் வரவினைக் காண்பீர்கள். நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருவீர்கள். நகைச்சுவை பேச்சுக்களால் அடுத்தவர் மனம் கவர்வீர்கள். உடன்பிறந்தோரால் உங்கள் கவுரவம் உயரும்படியான சம்பவங்கள் நிகழும். இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பாராத வகையில் பெரிய மனிதர்களுடனான சந்திப்பு நிகழக்கூடும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பார்கள். வாகனங்களினால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் சற்று மன வருத்தத்தினைத் தோற்றுவித்தாலும் அவர்களது செயல்வெற்றி உங்களை பெருமிதம் கொள்ளச் செய்யும். கடன்பிரச்னைகள் வெகுவாகக் குறையும். தம்பதியரின் கருத்தொற்றுமை மிக்க செயல்பாடுகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுத் தரும். குறைந்த விலை உள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் உருவாகலாம். ஆடம்பர பொருட்களை மனம் அதிகம் நாடும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் மார்ச் ஐந்தாம் தேதி முதல் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் மாதத்தின் முற்பாதியில் உழைப்பினை வெளிப்படுத்தி பிற்பாதியில் அதற்குரிய தனலாபத்தினைக் காண்பீர்கள். நெடுநாளைய விருப்பங்கள் நிறைவேறும் நேரம் இது.
பரிகாரம் : ஞான தக்ஷிணாமூர்த்தி
சந்திராஷ்டமம் : மார்ச் 6