கோயில் வழிபாட்டில் முதல் வணக்கம் விநாயகருக்குத் தான். அவர் முன் தோப்புக்கரணம் போட்டு வழிபாட்டை தொடங்குகிறோம். இதற்கு ‘தோர்பிகரணம்’ என்று பெயர். ‘கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது’ என்பது பொருள். கைகளால் காதுகளைப் பிடித்தபடி மூன்று முறை குனிந்து நிமிர்ந்து விட்டு, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். மறந்து போன விஷயத்தை நினைவு படுத்த, தலையில் கை வைத்து தட்டியபடியே நினைவுக்கு கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நரம்புகள் துாண்டப்பட்டு மறந்த விஷயம் நினைவுக்கு வரும். அது போல காதை பிடிக்கும் போது, நரம்பு மண்டலம் துாண்டப்படும். மூளை விழிப்படைந்து நினைவாற்றல் பெருகும். ரத்த ஓட்டம் சீராகும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். அக்குபஞ்சர், அக்குபிரஷர் சிகிச்சை போல, தோப்புக்கரணம் புத்துணர்வுக்கு வழிவகுக்கும். குழந்தைக்கு தலைமுடி எடுத்து, காது குத்தும் சடங்கும் இந்த நோக்கத்தில் தான் நடத்தப்படுகிறது. காது குத்தும் போது குழந்தையின் நாடிநரம்பு துாண்டப்பட்டு அறிவு, கிரகிப்புத்திறன் அதிகரிக்கும். அந்தக் காலத்தில் ஆசிரியர்கள், மறதிக்கு உள்ளாகும் மாணவர்களை காதைத் திருகி தண்டனை தருவதும் இதற்காகவே.