‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை’ என்பார்கள். அதாவது சரணடைந்தவரை காக்க இன்றே ஓடி வருபவர் நரசிம்மர். தாயின் கர்ப்பத்தில் பிறந்து, வளர்ந்து ஆளாகி இரண்யாசுரனைக் கொல்ல தாமதம் ஏற்படும் என்பதால் உடனடியாக துாணில் இருந்து வெளிப்பட்டவர் நரசிம்மர். அசுரனான இரண்யன் தன் மகன் பிரகலாதனிடம், ‘‘எங்கேயடா உன் ஹரி?’’ எனக் கேட்ட போது, ‘‘எங்கும் நிறைந்திருக்கும் விஷ்ணு துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்’ என்று துாணைக் காட்டினான். அந்த துாணைப் பிளக்க முயன்றான் இரண்யன். சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக கர்ஜித்தபடி, துாணை பிளந்து கொண்டு வந்தார் நரசிம்மர். கூரிய நகங்களால் இரண்யனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாக அணிந்து கொண்டார். உக்கிரம் கொண்ட அவரை, மகாலட்சுமி அமைதிப்படுத்தினாள். அவளைத் தன் மடியில் வைத்தபடி லட்சுமி நரசிம்மராக காட்சியளித்தார். இவருக்குரிய சுவாதி நட்சத்திரத்தன்று விரதமிருந்து பானகம், தயிர்சாதம் படைத்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.