திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் தேகளீசபெருமாளுக்கு தென்பெண்ணை ஆற்றில் மாசிமக தீர்த்தவாரி வைபவம் நடந்தது.
திவ்ய தேசங்களில் ஒன்றானநடு நாட்டு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி வைபவம் நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் உலகளந்த பெருமாள் விஸ்வரூப தரிசனம், 6:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, 7:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள், சக்கரத்தாழ்வார் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பந்தலில் எழுந்தருளினார். 10:00 மணிக்கு அலங்கார விசேஷ திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து 11:00 மணிக்கு சக்கரத்தாழ்வார் நதிக்கரையில் எழுந்தருளி நீராடி தீர்த்தவாரி வைபவம் நிகழ்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாளுக்கு மகா தீபாராதனை, திவ்ய பிரபந்த சேவை, புறப்பாடாகி ஆஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.