பதிவு செய்த நாள்
27
பிப்
2021
06:02
அவிநாசி: திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் தேரோட்டம், விமரிசையாக நடந்தது.
கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும், அவிநாசி அருகேயுள்ள, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் விளங்குகிறது. தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை, இந்து அறநிலையதுறை ஏற்றுள்ளது. இந்தாண்டு, தேர் திருவிழா, கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, திருமுருகநாத சுவாமி தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர், நிலையை அடைந்ததும், சண்முகநாதர் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’, ‘முருகா சரணம்’ கோஷம் விண்ணை பிளக்க, தேர்கள் வலம் வந்தன. திருப்பூர், சிவனடியார் திருக்கூட்டத்தினரின், கைலாய வாத்திய நிகழ்ச்சி நடந்தது; பக்தர்கள் மெய் மறந்து ரசித்தனர். இதில், சிறு பிள்ளைகள் கூட கடினமான வாத்தியத்தை இசைத்து, தங்களின் ஆன்மீக பற்றுதலை வெளிப்படுத்தினர். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.