பதிவு செய்த நாள்
27
பிப்
2021
06:02
புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே, வாராப்பூரில் உள்ள பூர்ணகலாம்பிகை, புஷ்பகலாம்பிகை சமேத பெரிய அய்யனார் கோவிலில், மனித ரத்தத்தில் சோறு பிசைந்து, பில்லி சோறு எறியும் விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வாராப்பூரில் பூர்ணகலாம்பிகை, புஷ்பகலாம்பிகை சமேத பெரிய அய்யனார் பாலையடி கருப்பண்ண சுவாமி கோவில்களில், மாசி மக திருவிழா நடந்தது.விழாவை ஒட்டி, நேற்று மதியம், 12:30 மணிக்கு, மனித ரத்தத்தில் சோறு பிசைந்து, பில்லி சோறு எறியும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், பரம்பரை வழக்கப்படி, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தொடையை கீறி, அதிலிருந்து வந்த ரத்தத்தை, தயாராக இருந்த சோற்றில் ஊற்றி பிசைந்து, உருண்டையாக உருட்டி வைத்தனர். அதன்பின், 30க்கும் மேற்பட்ட பூசாரிகள், காட்டு பகுதியில் வீசுவதற்காக, அந்த பில்லி சோற்றை எடுத்துச் சென்றனர். காட்டு பகுதியில் மேல் நோக்கி வீசும் பில்லி சோறு, கீழே விழாது என்பது ஐதீகம்.இந்த பில்லி சோறு தயாரித்து, சுவாமிகளுக்கு படைக்கும் வரை, பூசாரி குடும்பத்தை சேர்ந்த ஒருவர், கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த வேஷ்டி கூடாரத்துக்குள் அமர்ந்திருந்தார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, வைரத்தேர் திருவிழா நடக்கிறது.