ப்ரஸாத்ய கீர்பி: ஸ்துவதோ முநீந்த்ராந் அநந்ய நாதாவத பார்ஷதௌ தௌ ஸம்ரம்பயோகேந பவைஸ் த்ரிபிர்மாம் உபேத மித்யாத்த க்ருபம் ந்யகாதீ: வைகுண்டத்தின் வாயில் காவலர்களான ஜய, விஜயர் இருவரும் ஒருமுறை தவமுனிவர்களான சனகர், சனந்தனர். சனாதனர், சனற்குமாரர்களை அவமரியாதை செய்தனர். அன்பான வார்த்தைகளைப் பேசி முனிவர்களை சமாதானப்படுத்தினார் திருமால். ஜய, விஜயரிடம், ‘‘ தவறுக்கு தண்டனையாக இருவரும் ஸம்ரம்ப யோகத்தால் மூன்று பிறவியெடுத்தபின் என்னை அடையுங்கள்” என்றார். எப்படி காமத்தால் கோபியரும், பயத்தால் கம்சனும் திருமாலை அடைந்தார்களோ அது போல இருவரும் கோபத்தால் அசுரர்களாக பிறந்து கடவுளை அடைந்தனர். இதற்கு ‘ ஸம்ரம்ப யோகம்’ என்று பெயர். வைகுண்டவாசிகளுக்கு அவர்களுக்கு பிறப்பும், இறப்பும் இல்லை. திருமாலைத் தவிர யாராலும் கொல்லவும் முடியாது. எனவே அசுரர்களாக மூன்று பிறவிகளை எடுக்கக் கூறினார். மேலும் எந்த விதத்திலாவது கடவுளை நாம் அடைய வேண்டும் என்பதே நம் சனாதன தர்மம். நாத்திகவாதி கூட எளிதாக கடவுளை அடையலாம் என்பதற்கு இதுவே சான்று என நாராயண பட்டத்ரி இந்த ஸ்லோகம் மூலம் தெரிவிக்கிறார்.