பதிவு செய்த நாள்
10
ஏப்
2021
10:04
பழநி: பழநி மலைக்கோயிலில் நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இன்று முதல் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கொரனோ நோய்த் தொற்றால் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்கள், முகக் கவசம் இல்லாமல், சமூக விலகல் கடை பிடிக்காதவர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை. இரவு 8 மணி வரை மட்டும் மலைக் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிப்பதால்,
இரவு 7 மணிக்குமேல் குடமுழுக்கு மண்டபத்தின் வழியாகவும், வின்ச், ரோப் கார் வழியாகவும் மலைக்கோயில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இரவு 7: 45 மணி வரை வின்ச், ரோப் காரில் கீழே இறங்கலாம். ஆன்லைன் மூலம் பதிவு செய்த ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் சுவாசக் கோளாறு இருதயநோய் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களும், 60 வயதிற்கு மேல் மற்றும் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும், கர்ப்பிணி பெண்களும் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கோயிலுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து, கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, கால்களைக் கழுவிய பின், உடல் வெப்ப நிலையை அறியும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்தபின் அனுமதிக்கப்படுவர். காலனி பாதுகாக்கும் இடம், வாகன நிறுத்தும் இடங்களில் சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். திருக் கோயிலின் உட்புறமும், வெளிப்புறமும், சிற்றுண்டி சாலைகளிலும், சமூகவிலகல் கடைப்பிடிக்கவேண்டும். கோவிலுக்கு பூ பழம் ,தேங்காய் கொண்டு வருவதையும், அங்கப்பிரதட்சணம் செய்யும் வேண்டுதல்களையும், பக்தர்கள் தவிர்க்க வேண்டும். முடிக்காணிக்கை செலுத்தும் இடங்களில் அரசு நிலையான கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்க வேண்டும். மலைக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் இளைப்பாற அனுமதி இல்லை. 5 நபர்களுக்கு மேல் ஒன்றாக இருப்பதும், கூட்டமாக கூடுவதும் தவிர்க்க வேண்டும். மேலும் திருவிழாக்கள், சுவாமி திருவீதி உலா போன்றவை அரசு விதிகளின்படி திருக்கோயிலின் ஆகம, பழக்க வழக்கங்களின் படி நடைபெறும். இவற்றில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.