பதிவு செய்த நாள்
10
ஏப்
2021
01:04
வாரணாசி : வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் - ஞான்வாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை வரவேற்று பலரும் டிரெண்ட் செய்தனர். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: வாரணாசியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காசி விஸ்வநாதர் கோவில், முகலாய மன்னர் அவுரங்கசீபால் இடித்து தள்ளப்பட்டது. அங்கு, மசூதி கட்டப்பட்டுள்ளது. இது வரலாற்றுப் பூர்வமான உண்மை.
முகலாயர் ஆட்சி முடிந்த பின்,மசூதிக்கு அருகே, விஸ்வநாதர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. அதனால், காசி விஸ்வநாதர் கோவில், ஞான்வாபி மசூதி வளாகத்தை, ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு நடத்தினால், விஸ்வநாதர் கோவில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கும். அந்த வளாகத்தில் தான், கோவிலை இடிக்கும் போது இருந்த, விஸ்வநாதர் லிங்கமும் புதைக்கப்பட்டுள்ளது. என கூறப்பட்டு இருந்தது.
தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள, மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், விஸ்வநாதர் கோவில் மற்றும் மசூதி வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான செலவை, மாநில அரசு ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை வரவேற்று பலரும் சமூகவலைதளமான டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #KashiMathuraisours, Mosque, Aurangzeb, #KashiVishwanath, #Mughal உள்ளிட்ட பல ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.
இந்த ஹேஷ்டாக்கில் பதிவிட்ட சிலரின் கருத்துக்களை இங்கு பார்ப்போம்...
* நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கான நேரம். காசியை மீட்டெடுப்பதற்கான நேரம்.
* இதில் ஆராய்ச்சி செய்ய ஒன்றுமில்லை. கோவில்களை இடித்து முகாலாயர்கள் மசூதியை கட்டினார்கள் என்பது வரலாற்று சான்று. இன்றும் காசி பகுதியில் தற்போது உள்ள மசூதிகளின் பின்னணியில் கோயில் தூண்கள் இருப்பதை பார்க்கலாம்.
* காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஞான்வாபி மசூதி வளாகம் தொடர்பான பிரச்னையில் தொல்பொருள் துறையின் குழுவிடம் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் இருந்தன என்பதற்கான ஆதாரத்துடன் உண்மை விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன்.
* 500 ஆண்டு போராட்டத்திற்கு பின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி கிடைத்தது. இத்தனை ஆண்டுகளில் ஒரு போதும் நாம் பின்வாங்கவில்லை. இப்போது காசி விஸ்வநாதர் கோவில் - ஞான்வாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ஞான்வாபி மசூதியின் கீழ் இந்து கோயில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். நிச்சயம் நீதி வெல்லும்.
* கோயில்களில் நந்தி எப்போதும் சிவலிங்கத்தை நோக்கி தனது முகத்தை வைத்திருப்பார். ஆனால் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள நந்தி ஞான்வாபி மசூதியை எதிர்நோக்கி இருப்பார். நந்தி வாசலைப் பார்க்கும்போது, தனது கடவுள் தோன்றுவார் என்று காத்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இன்றைய உத்தரவு நம்பிக்கையைத் தருகிறது. ஹர ஹர மகாதேவ்.
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக முகாலாயர்கள் இந்திய கோயில்களை களவாடியது, இடித்தது, அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து தான் ஞான்வாபி மசூதியை கட்டினார் என்பதை பலரும் சுட்டிக்காட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.