மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு கூடுதல் பஸ் வசதி தேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2021 11:05
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டியில் இருந்து வேலப்பர் கோயில் செல்ல கூடுதல் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெப்பம்பட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில்.
மருத மரங்களின் வேர்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை, இயற்கையான சூழல் கோயிலின் தனிச்சிறப்பு. கடந்த சில மாதங்களாக மலைப்பகுதியில் குறைவான மழையால் தற்போது சுனையில் நீர் சுரப்பு குறைந்துள்ளது. அமாவாசை, மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி நாட்களில் அதிக பக்தர்கள் கோயிலுக்கு சென்று வருகின்றனர். கொரோனா கட்டுப் பாடுகளால் தற்போது தடையுள்ளது. ஆண்டிபட்டியில் இருந்து காலை 8:30 மணிக்கும், மாலை 4:00 மணிக்கும் பஸ் வசதி உள்ளது. மற்ற நேரங்களில் கோயிலுக்கு பக்தர்கள் தெப்பம்பட்டியில் இருந்து தனியார் வாகனங்களில் அல்லது நடந்து செல்ல வேண்டும். ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். தெப்பம்பட்டியில் இருந்து வேலப்பர் கோயில் வரை உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலைக்கு பலரும் ஆட்டோக்களிலேயே பயணிக்கின்றனர். எனவே பகல் நேரத்தில் ஆண்டிபட்டியில் இருந்து வேலப்பர் கோயிலுக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.