பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நேற்று நடந்தது.பாகூரில் உள்ள வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திரத்தையொட்டி கடந்த 4ம் தேதி முதல் மூலநாதருக்கு தாராபிஷேகம் நடைபெற்று வந்தது. அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றதையொட்டி, நேற்று மூலநாதருக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடந்தது. காலை 6.00 மணிக்கு பால விநாயகர், வேதாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 10.30 மணிக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் மூலநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.