பதிவு செய்த நாள்
16
மே
2021
12:05
குடியாத்தம்: குடியாத்தம், கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா பக்தர்கள் இன்றி நடந்தது. ஆண்டுதோறும் வேலுார் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் நடக்கும் சிரசு திருவிழாவில், ஐந்து லட்சம் பக்தர்கள் பங்கேற்பர்.
கொரோனா ஊரடங்கால், கடந்தாண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா பக்தர்கள் இன்றி நடந்தது. தற்போது இரண்டாவது கொரோனா அலை பரவி வருகிறது. இதனால், இந்தாண்டும் விழா நடந்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து பக்தர்கள் இன்றி கோவிலுக்குள், அம்மன் சிரசு திருவிழா நேற்று நடந்தது. நள்ளிரவு, 1:00 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட அம்மன் சிரசு, கோவிலுக்குள்ளேயே வலம் வந்தது. தொடர்ந்து சண்டாளச்சி அம்மன் உடலில் கெங்கையம்மன் சிரசு பொருத்தப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு சண்டாளச்சி அம்மன் உடலிலிருந்து, அம்மன் சிரசு பிரிக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் வைக்கப்பட்டது. இந்த விழா ஒன்றரை மணி நேரத்தில் நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்ய தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.