புதுடில்லி: சிவபெருமான் கையில் மது வைத்துள்ளதுபோல் சர்ச்சைக்குரிய வகையில் ஸ்டிக்கர் செய்ததற்காக இன்ஸ்டாகிராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் புகைப்படங்கள் பகிரும் சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. பேஸ்புக்கை தாய் நிறுவனமாக கொண்ட இன்ஸ்டாகிராமில் பல பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்டிக்கர் வசதியில் சிவன் என தேடினால் சிவபெருமானின் கார்ட்டூன் ஒன்று ஒரு கையில் அலைபேசியும் மறுகையில் மதுபானமும் வைத்துள்ளது போன்ற ஸ்டிக்கர் உள்ளது. இதை கண்ட பலர் இன்ஸ்டாகிராம் ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் மீது டில்லியில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து தற்போது அந்த ஸ்டிக்கர் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.