பதிவு செய்த நாள்
25
ஜூலை
2021
02:07
கோவை:கோவையில் அனுவாவி சுப்ரமணியர் மற்றும் குன்றத்துார் முருகன் கோவில்களுக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்துவது குறித்து, முதல்வருடன் பேசி முடிவு செய்யப்படும், என்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார். கோவை, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆய்வுக்கு பின், அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:மருதமலை கோவிலுக்கு எளிதாக பக்தர்கள் சென்று வருவதற்கு, 3.5 கோடி ரூபாய் மதிப்பில், லிப்ட் அமைக்க, புதிய டெண்டர் விடப்பட்டு பணிகள் வேகமாக துவக்கப்படும். தமிழகத்தில் ஐந்து கோவில்களில், ரோப்கார் அமைக்க முடிவு செய்துள்ளோம்.அதனுடன், கோவை அனுவாவி சுப்ரமணியர் மற்றும் குன்றத்துார் முருகன் கோவில்களுக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்துவது குறித்து, முதல்வருடன் பேசி முடிவு செய்யப்படும்.
திருக்கோவில்களில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் அடுத்த மாதம் இறுதிக்குள் நிரப்பப்படும். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவோருக்கு நிரந்தரப்பணியும், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணியும் வழங்கப்படும்.கோவை முத்தண்ணன் குளக்கரையில் அங்காளம்மன் கோவில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டதற்கு, மாற்று இடம் ஒதுக்கி கோவில் கட்டப்படும். வளர்ச்சிப்பணிகளுக்காக கோவில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது, தவிர்க்க முடியாததாகிவிட்டது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் செந்தில் வேலவன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.கோவை வடவள்ளியில் உள்ள மருதமலை தேவஸ்தான மேல்நிலை பள்ளியிலும் அமைச்சர் ஆய்வு செய்தார்.கட்சியினருக்கு டோஸ்அமைச்சர் சேகர்பாபு நேற்று மாலை, 6:10 மணிக்கு, கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். கோவிலில் நுழைந்த அமைச்சரிடம் அங்கு காத்திருந்த தி.மு.க.,வினர் ஏராளமானோர், சால்வை அணிவிக்க முயன்றனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவரும் இச்சூழலில், கட்சியினர் நடவடிக்கையை பார்த்து கோபமடைந்த அமைச்சர், நான் கட்சி கூட்டத்துக்கு வரவில்லை; கோவிலில் ஆய்வுக்குதான் வந்திருக்கிறேன். நான் இங்கு இருக்கட்டுமா, போகட்டுமா என, கடிந்துகொண்டார். தொடர்ந்து, கோவில் யானை கல்யாணிக்கு வெள்ளரிக்காய், கேரட் உணவு வழங்கி, ஆசி பெற்றார். பட்டீஸ்வர சுவாமியை தரிசித்துவிட்டு, கோவிலை சுற்றி ஆய்வுசெய்த அமைச்சர் சேகர்பாபு, நந்தி பெருமானை வணங்கினார். அப்போது, அர்ச்சகர் ஒருவரிடம் கோவில் வரலாறு குறித்து கேட்டறிந்தார்.