பதிவு செய்த நாள்
28
ஜூலை
2021
04:07
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ரோப் கார் அமைக்கப்படும் என்று, அறநிலையத் துறை அமைச்சர் அறிவித்ததை, பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், மலை உச்சியில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. வேதகிரீஸ்வரர், சுயம்பு மலைக்கொழுந்தாக வீற்றுள்ளார். சொக்கநாயகி அம்பாள், தனி சன்னிதி கொண்டுள்ளார். பக்தர்கள், பவுர்ணமிதோறும் குன்றுகளை வலம் வந்து சுவாமியை வழிபடுகின்றனர். முதியோர், பெண்கள், சிறுவர்கள், கோவிலின் 560 படிகள் வழியாக மலை உச்சிக்குச் செல்ல சிரமப்படுகின்றனர். தற்கால அவசியம் கருதி, ரோப் கார் அல்லது குன்றில் வாகன பாதை அமைக்க, பக்தர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்துவதாக, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அறிவித்ததை, பக்தர்கள் வரவேற்றுள்ளனர். திருக்கழுக்குன்றம் டி.வாசு கூறுகையில், ‛இந்த கோவிலில், கிரிவலம் செல்ல பக்தர்கள் அதிகம் வருகின்றனர். அவர்கள் மலை ஏறி செல்ல சிரமப்படுகின்றனர். ரோப் கார் அமைத்தால், மலைக்கோவிலுக்கு எளிதாக செல்லலாம். திருவண்ணாமலை கிரிவலம் போன்று இதுவும் பிரபலமாகும், என்றார். திருக்கழுக்குன்றம் எல்.திவ்யா கூறுகையில், ‛‛வேதகிரீஸ்வரர் கோவிலில், ரோப் கார் அமைக்க, பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பு உள்ளது. இது அமைக்கப்பட்டால், இந்த ஊர் மேலும் பிரபலமாகும். பக்தர்கள் வருகையால் வியாபார வளர்ச்சியும் ஏற்படும், என்று கூறினார்.