ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலில் இந்த வருடமும் ஆண்டாள் ஆடி தேரோட்ட திருவிழா கோயில் வளாகத்திற்குள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இக்கோயிலில் வருடந்தோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த தேரோட்ட திருவிழா இந்த வருடம் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கொடியேற்றமும், 11ம் தேதி ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்ட உற்சவமும் நடைபெற உள்ளது. ஆனால், கொரோனா நோய் பரவல் காரணமாக திருவிழாக்கள் நடத்த அரசு நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனவே, கடந்த வருடம் போல் இந்த வருடமும் பெரிய தேர் இழுப்பதற்கு பதிலாக கோயில் வளாகத்திற்குள் தங்கத் தங்கத் தேரோட்ட திருவிழா நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்து, இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த வருடமும் பெரிய தேரோட்ட வைபவம் நடக்காததால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மீக பக்தர்கள் வருத்தமடைந்துள்ளனர்.