சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று கூறியதாவது:சென்னை திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில், விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, சன்னதி தெருவில் உள்ள இறைச்சி கடைகள் அகற்றப்படும். தமிழகத்தில் உள்ள கோவில்களில், விரைவில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். அதற்காக, 47 கோவில்களை தேர்வு செய்து, அன்னை தமிழில் அர்ச்சனை என, விளம்பர பலகைகள் வைக்கப்படும்.அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும். தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர், அவரை தொடர்பு கொள்ளலாம். முதற்கட்டமாக, வரும் வாரத்தில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், தமிழில் அர்ச்சனை துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.