Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகிலத்திரட்டு அம்மானை பகுதி-7 அகிலத்திரட்டு அம்மானை பகுதி-9 அகிலத்திரட்டு அம்மானை பகுதி-9
முதல் பக்கம் » அகிலத்திரட்டு அம்மானை!
அகிலத்திரட்டு அம்மானை பகுதி-8
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
05:06

மாதுதிரு லட்சுமியாள் மகரச் சிலைபோலே
ஒது மணியலைக்குள் ஒவியம்போ லேவளர
மாதை மகரச் சிலையாய் வளரவிட்டுத்
தாதணியும் நாதன் சங்கரரோ டேதுரைப்பார்
கூட்டுக்கிளி போலிருந்த கொடியிடையைப் போகவிட்டு
நாட்டி லிருப்பேனோ நம்முடைய மைத்துனரே
சீதை மகரச் சிலைபோ லங்கேவளரப்
பாதையது தேடாமல் பதிந்திருக்க ஞாயமுண்டோ
அப்போ துசிவனார் அவரேது சொல்லலுற்றார்
செப்போடு வொத்த திருமாலே நீர்கேளும்
நடத்தும்படி யுள்ள ஞாயமெல்லா மிப்போது
சடைத்து இருக்காமல் தானடத்து மென்றுரைத்தார்

சம்பூர்ணத் தேவன் பரதேவதை மனுப்பிறப்பு

அந்தப் பொழுதில் ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து செப்புவா ராதியோடு
நல்லதுகா ணீசுரரே நாடுந்தே வாதிகளில்
வல்லசம் பூரணனும் வாய்த்த எமலோகமதில்
பரதே வதையான பைங்கிளியுந் தேவனுமாய்
மருவனைய மாதும் மன்னவனு மாய்ப்பிறக்க
உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ் செய்திடவே
ஆனதா லவரை அவனிதனி லேபிறவி
ஈனமுட னமைக்க இதுநா ளாகுவதால் 20

நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ
என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே
அப்படித்தா னீசுரரும் ஆதிநா ராயணரும்
இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே
தேவ ரெதிரே தெய்வேந் திரன்தானும்
மூவர் நடுவன் முத்தனரி நாரணரின்
சங்கு சரம்போல் தங்கநவ ரத்தினத்தால்
எங்கு மொளிவீசும் இரத்தினத் திருமுடியைச்
சூடித்தெய் வேந்திரனும் சிவனெதிரே போகவென்று
நாடி யகமகிழ்ந்து நாரா யணருடனே
சந்தோச மாகத் தான்வருகும் வேளையிலே
கண்டுசம் பூரணனும் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்
மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில்
தானாகிய மான சங்குசரத் தங்கமுடி
என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு
தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில்
இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப்
பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை
எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள் 40

வல்லான நீத வையகத்தை யாண்டிருந்தால்
எத்தனையோ நாமள் இலங்கு மகிழ்ச்சையுடன்
வர்த்தனையாய் வாழ்வதற்கு வாய்த்தமுடி ஈதல்லவோ
என்றுசொல்லத் தேவன் இச்சைகொண்டு பெண்ணாளும்
நன்றுநீர் சொன்னமொழி நல்லா யிருக்குதுகாண்
அப்படித்தா னம்மை ஆதிசிவன் படைத்தால்
இப்படியும் படைத்தோர் இறவா திருப்பாரோ
என்றுபெண் ணாளுரைக்க ஏற்றசம் பூரணனும்
அன்று பெருமூச்சு அலைபோ லெறியலுற்றான்
அந்தப் பொழுதில் ஆதி சிவமுதலும்
வந்தங்கு நின்றார் மாகிருஷ்ண மாலவரும்
கண்டந்தத் தேவன் கைமறந்த நிஷ்டையோடு
தண்டமிழ்சேர் பதத்தைத் தையலும்வந் தேவணங்கி
இத்தனைநாள் யாங்கள் நின்றதவம் கண்டிரங்கிச்
சித்த மிரங்கிச் சிவனேநீர் வந்தீரோ
எந்தன் பெருமானே இறையவரே வந்தீரோ
நந்தகோ பால நாரணரே வந்தீரோ
குருவே அரிநாதா கோபாலா வந்தீரோ
முருகக் குருபரனே முத்தாநீர் வந்தீரோ
செல்வக் கடலே சீமானே வந்தீரோ  60

கல்விக் கடலான கறைக்கண்டா வந்தீரோ
அரவணிந் தத்திவுரித்(து) அணிந்தோரே வந்தீரோ
பரமசிவ மான பச்சைமால் வந்தீரோ
இப்படியே மானாளும் ஏற்றசம் பூரணனும்
அப்படியே வந்தோர் அடிபணிந்து போற்றிடவே
மாய பரனும் மனமகிழ்ந்து கொண்டாடி
ஆயனைப் பார்த்து அருளுவா ராதியுமே
மாயவரே கேட்டீரோ வாய்த்தஇத் தேவனுந்தான்
தூயவரே நின்றதவம் துலைத்தறுத்தா னில்லையிவன்
முற்றுந் தவமும் முழுதும்நிறை வேறுகையில்
சிற்றின்ப மாகித் திருமுடிமே லிச்சைகொண்டு
வாடி யயர்ந்தான் மங்கையருந் தேவனுமே
நாடி யிவன்தனக்கு நல்வளமை யேதுசொல்வீர்
அப்போது நாரணரும் அகமகிழ்ந்து கொண்டாடிச்
செப்புகிறா ரந்தச் சிவனோடு எம்பெருமாள்
ஏது விதமாய் இருந்ததவ மேகுறைய
தீதுவந்த ஞாயம் செப்பிடீ ரென்றுரைத்தார்
அப்போ சிவனார் அகமகிழ்ந்து தேவனோடு
இப்போ துன்சிந்தை எண்ணமெல்லாஞ் சொல்லுவென்றார்
தேவ னதைக்கேட்டுச் சிந்தை மிகக்கலங்கி 80

ஆவி மறுகி அவனேது சொல்லலுற்றான்
காரணரே நாங்கள் கருத்தில் நினைத்ததெல்லாம்
பூரணமா யங்கே புகுந்துதோ யென்சிவனே
ஐயோநான் சொன்னேனென் ஆயிழையோ டல்லாது
கையோ கண்ணாலே காணேனே மற்றொருவர்
ஊமை மொழிபோல் ஒதுக்கி லுரைத்தாற்போல்
நாமறியப் பெண்ணறிவாள் நாடறியா தென்றிருந்தோம்
இவர்க ளறிவதற்கு யார்சொல்லிப் போட்டாரோ
எவர்களும் நாம்பேசுகையில் இங்குவரக் காணோமே
ஆர்சொல்லிப் போட்டாரோ அறியோமே யென்சிவனே
தார்சிறந்த என்சிவனே சர்வ தயாபரனே
பூரணனே வாசவனே பொறுத்தினிக் கொள்ளுமையா
நாரணரே என்சிவனே நாடிப் பொறுவுமையா
என்றுசொல்லித் தேவன் ஏற்ற விருத்தமதாய்
நன்றினிய முப்பொருள்மேல் நற்போற்ற லேபடிக்கப்
பரதே வதையான பைங்கிளியு மப்போது
திரமான தாயார் சிவசக்தி பேரதிலும்
சிவநாமப் பேரதிலும் ஸ்ரீகிருஷ்ணர் பேரதிலும்
விவமான ஆசிரிய விருத்தம்போல் போற்றலுற்றாள்        100

காரணா அரிநாரணா கவிபூரணா
வெகுதோரணா கவிஞோர் தொழும் வாரணா
கருணகரத் தருணாவெகு தருணா
கவிவருணா கவிமால் சிவாபோற்றி
காயாம்பூவின் மேனிநிறமாயா சிவசிவாயா
கருவா யுருவுருவா யுனைத்
தினமே யருள் நியாயா
குறிமத்தகா கருணாகரா போற்றி

குணசீரா வெகுதீரா நலிவீரா
புவிநாதா திருவோடுறு மார்பா
சிறியார்மிக அறியாச்செய்த வெறியானதைச்
சிறிதாக்கியே சேர்ப்பாய் முகம்பார்ப்பாய்
முடிவானதை யறியாமலே மோகமாய்
வெகுதாகமாய் உளறித் தவங்குளறியே
உன்சொற்பதம் அஞ்சல்லென ஒஞ்சிப்பத
மஞ்சினோம் உன் செயல்தந் தருள்வாயே

இப்படியே கன்னி ஏற்றபர தேவதையும்
அப்படியே ஆசிரிய விருத்தமொன்று பாடிடவே
கேட்டு அரிநாரணரும் கிளிமொழியைத் தான்பார்த்து
மெட்டுக் கொடியிடையே மின்னிடையே நீகேளு
உன்புருஷ னங்கே உற்றஎம லோகமதில்
இன்புருகி வாடி ஏங்கித் தவிப்பதினால்
அவனைநீ மறந்து ஆனதெய்வப் பூரணனை
இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும்
நிறைவேற மாட்டாமல் நினைத்தகே டித்தனையால்
பிறபோநீ பூமிதனில் பெரியசான் றோர்வழியில்
எமவழியி லோர்பிறவி என்மகவா யங்கிருக்க
அமைப்பா னதற்கு அவ்வழிதா னாயிழையே 120

இந்தத் தவக்குறைக்கு இன்னமங்கே நீபிறந்து
முந்தப் புருஷனுக்கு முன்வேலையுங் கழித்து
அழுந்தத் துயரப்பட்டு அவனூழியங்கள் செய்து
குளிர்ந்த மொழியற்றுக் கூடுஞ் சரசமற்று
எந்நேர முன்றனக்கு ஏக்கமுட னழுந்தி
மின்னேகே ளிந்த மிகத்தேவ னுன்வழியில்
கொண்டபச்சத் தாலே கோதைய ரேயுனையும்
கண்டிச்சை கூர்ந்து கர்மக் கடுவினையால்
கருவா லுருவைக் கைக்குள் வசமாக்கிப்
பருவா பருவமதில் பாவையேநீ யிவனோடு
இருவ ரொருவரென இச்சைமிகக் கூர்ந்து
குருவை மறந்து கொண்டவனைத் தான்மறந்து
தாய்தகப்பன் மாமன் தமையன் தனைமறந்து
வாயிற் படிமறந்து வாழ்வை மிகமறந்து
சொந்த மனைமறந்து சுகசோபன மறந்து
சந்தோச மற்று சகலோர்க்கும் நாணமுற்று
முற்புரு ஷன்தனக்கு மூலக்கருக் கேடணைத்து
இப்புருஷன் தானெனவே எவ்வுலகுந் தானறியக்
கட்டிய மங்கிலியம் காசினியோர் தாமறியக்
கெட்டினாற் போலே கீர்த்தி மிகப்பிறந்து 140

மேலும்பல தொந்தரவு மிகுநாள் வழிதோறும்
கேலி மிகவாகிக் கிலேச மிகவடைந்து
உதிர வெளியாகி உட்செருமல் விக்கலுமாய்த்
தீனறா மந்தச் செடியேற்பச் செய்கையினால்
வீட்டை விரித்து மேலேதெய்வ வழியாய்
நாட்டை யரசாண்டு நாச்சியார் போலிருப்பாய்
என்று சிவனாரும் எம்பெருமாளு முரைத்து
அன்று ஏமச்சண்டன் அவ்வழியி லேயமைத்தார்
அமைக்க அணங்கும் அவனிதனி லேபிறக்க
எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம்
மாது புவியில் வளரப் பிறந்தபின்பு
தாது கரமணிந்த சங்கு சரத்தாமன்
தேவன் தனைப்பார்த்துச் செப்புவா ரெம்பெருமாள்
பூவுலகி லுன்றனுட பெண்பிறக்கப் போனதல்லோ
ஏதுநீ தேவா இனியுனது செய்தியென்ன
சீரொத்தத் தேவன் திருப்பாட்டு ஓதலுற்றான்

ஆறுசெஞ்சடை சூடிய ஐயனே
அலையிலேதுயி லாதி வராகவா
நீறுமேனி நிரந்தரம் பூசிவா
நீசிவாசிவ மைத்துன ராகவா
வீறுசத்தி மணவாள ரானவா
வீரலட்சுமி மன்னரரி ராகவா
ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா
எமையாட்கொள் ளும்நாரணா போற்றியே 160

சீதமாங்குணச் செல்வனே போற்றி
சிவசிவா சிவனே போற்றி
நீதவா நட்பெய்துவா போற்றி
நீசிவா சிவராகவா போற்றி
மாதவா அரிகேசவா போற்றி
வல்லனே அரிசெல்லனே போற்றி
ஆதவா அரிநாரணா போற்றி
அனாதியேயுன் றன்போற்றிப் போற்றியே

அய்யனேதவம் யானிற்கும் போதிலே
அந்திராணி மன்னனிந்திர னானவன்
பொய்யின் மாய்கைநினை வதினாலவன்
பொற்பக்கிரீடமீ துற்பனத் தாசையால்
மெய்யின்ஞா னத்தவம் விட்டுவாடினேன்
வித்தகாவுன் சித்த மிரங்கியே
செய்யும் பாவவினை தவிர்த்தாண்டருள்
சிவசிவா சிவசிவா சிவாபோற்றியே

போற்றியென் றேத்தித் தேவன் பொற்பதம் வணங்கி நிற்க
ஆத்தியே சூடும் வேதன் ஆகமே மகிழ்ச்சை கூர்ந்து
தீத்திய ஆய னோடு செய்தியே தெனவே கேட்க
நாற்றிசை புகழுந் தெய்வ நாரண ருரைக்கின் றாரே

தேவன் வணங்கித் திருப்பாதம் போற்றிடவே
ஆயனோ டந்த ஆதிசிவ மேதுரைக்கும்
அச்சுதரே தேவனுக்கு ஆன வளமையது
நிச்சயமாய்ச் சொல்லி நீரனுப்பு மென்றுரைத்தார்
அப்போது நாரா யணரு மகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று தேவனுக்கங் கேதுரைப்பார்
கேளாய்நீ தேவா கீழான மங்கையரைத்
தாழாத மேல்வகையில் சரியாக்க வேணுமென்று 180

நின்றாய் தவத்தில் நினைவொன்றைத் தானாட்டி
சண்டாளா நீநினைத்த நினைவுதவத் தொத்திடுமோ
சூழ வினையறுத்துச் சுருதிநே ருள்ளாக்கி
நீளநூ லிட்டு நீதவசு நிற்கையிலே
ஆசை நினைவாமோ அறிவுகெட்ட மாதேவா
பாச மறுத்தல்லவோ பரகெதியைக் காணுவது
ஏதுகா ணுன்றனக்கு இந்நினைவு வந்ததினால்
மாது பிறந்ததுபோல் வையகத்தில் நீபிறந்து
இந்த நினைவதற்கு இனிப்பிறந்து நீசிலநாள்
தொந்துயர மெல்லாம் தொல்புவியி லேதொலைத்துக்
கண்டந்த மங்கையரைக் கருவால் வசமாக்கிக்
கொண்டு திரிந்து கோதையரின் தன்னாலே
நஞ்சுதின் றானாலும் நாண்டுகொண் டானாலும்
உன்சீவன் மாய்க்க உனக்கு மனதாகிப்
பின்னுஞ்சில நாள்கழித்துப் பெண்ணோ டுறவாடித்
தன்னோவியம் போல் தானிருக்கும் நாளையிலே
உன்துயரந் தீர்த்து உன்னையெடுத் தென்மகவாய்
என்துயர மெல்லாம் யானேநீ மாற்றல்செய்து
என்வரிசை தானம் எல்லாமுனக் களித்துப்
பொன்னரசு தந்து புவியாள வைத்திடுவேன் 200
   
என்றுமா கிருஷ்ணர் இப்படியே சொல்லிடவே
அன்றந்தத் தேவன் அவரடியைத் தான்போற்றி
அய்யாவே பூமிதனில் அவதரிபோ என்றீரே
பொய்யா னகலியன் பூமிதனி லேபிறந்தால்
பிறந்த வழியும் பிதிருமந் தக்குலமும்
அறந்தழைக்கு மாலே அதுவுமென் னாற்கெதிதான்
பெற்றுக்கொள் ளும்படியாய்ப் புத்தி கொடுத்தருளிப்
பற்றுத லாகப் பலன்கொடுப்போ மென்றுசொல்லும்
அல்லாம லென்னைவந்து ஆட்கொள்ளும் நாளதுதான்
எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமையா
அப்பொழு தந்த ஆதிநா ராயணரும்
செப்புகிறா ரந்தத் தேவன் தனக்குத்திடம்
தெச்சணா பூமிதனில் தேசபர சோதனைக்கு
நிச்சயமாய் நான்வருகும் நிசத்துக் கடையாளம்
பூமியி லோர்திக்குப் பொருந்தி மிகவாழும்
சாமிவே தமறந்து சுழல்வேத முண்டாகும்
சாதி வரம்பு தப்பி நிலைமாறும்
பாரிகட்கு மூப்புப் பார்மீதி லுண்டாகும்
நீசக் குலங்கள் நெளுநெளெனப் பூமிதனில்
தூசியிடத் தெண்டம் தொடர்ந்து பிடிப்பார்கள் 220

வானத் திடிகள் வருடவரு டந்தோறும்
நீணிலத்தில் வீழும் நின்று மலைமுழங்கும்
சீமை தென்சோழன் சீர்பயிரு மேவிவரும்
இலைகள் கருகும் இருவேதம் பொய்யாகும்
தலைக்கண் படலம் தட்டழிய ஓடிநிற்கும்
நச்சேத் திரமுதிரும் நடக்கும் வழிகுறுகும்
பொய்ச்சேத் திரக்குருக்கள் பூமிதனில் மேவிவரும்
நவ்வா துலுக்கு நாட்டில் கலசல்வரும்
சிவ்வா லயங்கள் தேய்ந்து சுவரிடியும்
கிணறு பாழாகும் கீழூற்றுப் பொய்யாகும்
இணறு பெருத்து ஏங்குவாரே மனுக்கள்
மனுக்கள் தங்களுக்கு மாகலச லுண்டாகும்
மாமோக ஆசையினால் மாசண்டை யாகிவரும்
காமோக வெறியால் கனபழிக ளுண்டாகும்
மாதாவைப் பிள்ளை வைப்பு நினைத்துநிற்கும்
தாதாவை வேலை சந்ததிகள் கொண்டிடுவார்
மாடாடு தன்வயிற்றில் மனிதர்போல் தான்பிறக்கும்
கோடா னதுபெருத்துக் கொல்வார் சிலபேரை
காணிக்கை வேண்டல் கைக்கூலி தான்மீறும் 240

மாணிக்கத் தங்கம் வையிர மிகமறையும்
நீணிலத்தில் பேய்கள் நிரந்துமிகக் கோட்டிசெய்யும்
மாநிலத்தில் வேளாண்மை மழையில் மிகக்கேடுவரும்
பேதையர்கள் பிள்ளை பிறக்கு மதிசயம்போல்
கோதையர்கள் கொங்கை கூடாம லேவாழ்வார்
கூடப் பிறப்பைக் கொடும்பகைபோ லெண்ணிடுவார்
வான முறுமும் மழைகீழ்ச் சொரியாது
தான மழியும் சாஸ்திரங்கள் பொய்யாகும்
ஈனருக்குக் காலம் ரெம்பரெம்ப வுண்டாகும்
வீணர் பெருப்பார் வீடதனைக் கெடுப்பார்
தாணருட வேதம் தலையழிய விட்டிடுவார்
பொய்வேதம் பூமிதனில் பெருத்துமிக வுண்டாகும்
மெய்வேதந் தன்னை விரும்பா திகழ்ச்சிசெய்வார்
கள்ளர் பெருப்பார் கறியுப்பு மேமலியும்
கொள்ளையாய்ச் சம்பை கோடாமுக் கோடியுமாய்
நாணி யிறப்பார் நஞ்சித்தின் றேயிறப்பார்
கேணிக்குள் ளேயிறப்பார் கீறிக்கொண் டேசாவார்
வயிர முழுங்கி மாள்வார் சிலபேர்கள்
துயரம் பொறுக்காமல் தோயமதி லேவிழுவார்
ஈக்கள் பெருகும் எறும்பு மிகப்பெருகும் 260

காய்கள் பெருகும் கஞ்சா அபின்பெருகும்
சன்னாசி நிஷ்டை தவறி யலைவார்கள்
ஒன்னாமது சாதி உலைமெழுகு போலலைவார்
கட்டழிந்து பெண்கள் கற்பு மிகத்தவறும்
சட்ட மழியும் சந்தியம்பல மிடியும்
கூட்டங் குலையும் குடும்பம் பகையாகும்
நாட்டை யரசாங்கம் நாலுரண்டு மூன்றாகும்
கோட்டை யழியும் குச்சிக்கட் டைமதிலாம்
சீவசெந் தெல்லாம் தீனில்லாத் தட்டழியும்
சூவை பெருக்கும் சூறா வளிமீறும்
அக்கினியால் தண்ணீரால் அநேக சீமையழியும்
முக்கியமாய் லோகமதில் வாந்தி மிகமீறும்
இப்படித்தா னல்லாமல் இன்னு மநேகவளம்
செப்பத் தொலையாது செப்புவேன் பின்னுனக்கு
நீகேட் டதற்கு நிலையாக இத்தனையும்
நான்தேட் டமாக நாடியுன் னோடுரைத்தேன்
உன்பேரால் நானும் உள்ளாசை கொண்டிருந்துன்
தன்பேரா லென்றனக்குத் தலைச்சிறைதான் மாறுமென்று
சொன்னே னுனக்குச் சொல்லுவே னின்னமுமே 
என்ன இனிப்பிறக்க ஏதுனக்குச் சங்கடங்கள் 280

என்றுரைக்க நாதன் இசைந்ததே வனுரைப்பான்
அய்யாவே யென்னுடைய ஆதித் திருவுளமே
பொய்யா னகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே
சாதி பதினெண்ணாய்த் தான்பிரித்தா னேநீசன்
ஆதித்தா திதனிலே அமையுமையா என்கோவே
அல்லாம லுன்றனக்கு ஆதிவரை யெந்நாளும்
நல்லாகத் தொண்டுபண்ணி நவ்வியிருக்கு மனுவில்
படையுமையா யென்றன் பிதாவே யெனப்பணிந்தான்
குடையொன் றாற்பெரிய குருவு மகிழ்ந்துரைப்பார்
நல்லதுகாண் தேவாநீ நம்மக்கள் ஏழ்பேரில்
வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகவித்தாய்
அவ்வழியி லம்மனுவில் ஆனசான் றோர்குலத்தில்
மெய்வழியி லங்கே மிகப்பிறக்கப் போநீயென்றார்
நல்லதுதா னென்று நவிலுவான் தேவனுமே
வல்லவரே மூவருக்கும் மைத்துனராய் நிற்போரே
என்னைப் பிறவி இப்போது செய்யுமென்று
வன்னத் தேவாதி வணங்கிநின்றான் மாயவரை

ஆத்ம ஜெயம்

அப்பொழுது அய்யா நாராயணர் மகிழ்ந்து
முப்பொழுது வுள்ள முறைமையது கூறலுற்றார்
ஆறுதரம் நம்மை அகம்வைத்துக் கொண்டசடம் 300
பேதுபெற்ற தில்லையே பேறுநா மீந்திலையே
அச்சடல மம்மலையில் அருந்தவசு பண்ணினதே
இச்சடல மீடேற இந்தநாள் வந்துதென்று
தேவன் சடலமதைத் திக்கென் றழித்துவிட்டு
மூவர் நடுவருட முச்சடலக் கூடதையும்
வரவழைத்து வாருமென்று மறையோரைத் தானேவி
விரைவாக வாருமென்று விடைகொடுத்தா ரெல்லோரும்
நடந்து மறையோர் நல்ல மலைபார்த்துச்
சடம் வீற்றிருந்த தங்கமலை மீதில்வந்தார்
மலைமீதில் வந்து மலைப்புதுமை தான் பார்த்து
அலைமீதில் வாழ்துவரா ஆனபதி தன்னுடைய
வடவாசல் நேரே வாழு மலையிதுதான்
தடவரை யிம்மலையில் தானிருக்கும் நதிகள்
தங்கக்கிணர் வங்கக்கிணர் தாம்பிரக் கிணறுடனே
சங்கமகி ழிம்மலையின் தடாகமிது நன்றெனவே
கரைகாணாத் தேவர் காட்சியிடு மிம்மலைதான்
விரைவான மாமுனிவர் வீற்றிருக்கு மிம்மலைதான்
மரித்தோரைத் தானெழுப்பும் வாய்த்தசஞ்சீ விவளரும்
பதித்தான மிம்மலையின் பகுத்துரைக்கக் கூடாது
என்றுசொல்லித் தேவர் ஏற்றமலைக் குள்ளேகி 320

நன்றுநன் றென்று நாடியவர் பார்க்குகையில்
கண்டாரே காயாம்பூ கண்ணர்முக் கூடதையும்
கொண்டாடிக் கூடதையும் குளிர்ந்தரத மீதேற்றி
நடந்தார் கயிலை நாதர்திருக் கூட்டமதில்
வடந்தார மார்பன் வாய்த்த அரிநாரணரும்
பார்த்துச் சடலமதைப் பதிந்தமுகத் தோடணைத்துத்
தேற்றி உயிர்க்கொடுத்துச் செப்புவார் கூடுடனே
எடுத்த பிறப்புக்கு எல்லாமெனைச் சுமந்து
அடுத்து மூவுலகும் அங்கங்கே கொண்டேகிப்
பூமி கடலும் பொருப்புப்பூ லோகமெல்லாம்
நேமித் தெனைச்சுமந்து நேட்டமுடன் திரிந்தாய்
நீசெய்த நன்றி நினக்குரைக்கக் கூடாது
நானுனக்குச் செய்யும் நன்றி மிகக்கேளு
இத்தனை நாளும் எனைச்சுமந்து பாடுபட்டாய்
புத்திரனாய் நீயெனக்குப் பெரியதெய்வ உயிரில்
பிறந்து புவிமீதில் பின்னுஞ்சில நாட்கழித்துச்
சிறந்த முகூர்த்தமதில் சேர்த்தே உனையெடுத்து
உன்றனக்குப் புத்தி உபதேசங் களுரைத்து
என்றன் துயரமாற்ற யுகசோதனைக் கனுப்பி
உன்றன்துயர மாற்றி உகத்துயர மும்மாற்றி 340

என்றன்துயர மாற்றி ஈசர்துயரம் மாற்றி
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்ம தங்கநவ ரத்னபதி
முத்துநவ ரத்தின முடியுனக்கு நானருளி
எத்திசையு மெய்க்க ஏற்றமனு அன்போர்கள்
கட்டியங் கூறிக் காட்சியிட்டு வுன்றனக்கு
எட்டுத்திக்கும் நின்றேத்த ஏற்றகுடை யொன்றுதந்து
அரசாண்டு நீயும் அழியாத் திருவுளம்போல்
வீரசான்றோர் சூழ வீரக் கொடிநிறுத்திச்
செங்கோற்கு தர்ம சிவசெங்கோ லுமருளி
எங்கோ லரசு என்நாமச் சக்கரத்தால்
சீமையைம்பத் தாறுமுன் சொல்லொன்றுக் குள்ளாக்கிப்
பூமுகச்சிங் காசனமும் பொன்முகச்சிங் காசனமும்
கோமுகச்சிங் காசனமும் குணமுகச்சிங் காசனமும்
மாமுகச்சிங் காசனமும் மயில்முகச்சிங் காசனமும்
அன்னமுகச் சிங்கா சனமீதோ டாகவேதான்
பொன்னம் பலம்போல் பெரியசிங் காசனந்தான்
முப்பத்தி ரண்டும் முழுது முனக்கருளி
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க வுன்றனக்குத்
தருவேனா னுன்னுடைய தாயார்பே ராணையதாய் 360

என்றையா நாதன் எடுத்தவர்க் கேவுரைக்க
நன்றெனவே வானோர் நற்பூரணனைக் கொண்டாடிப்
பேறுபெற்ற சென்மம் பிராணனிது நன்றெனவே
பூருவத்தி லுள்ள பூசாந்திர மிவ்வளமை
என்னதவஞ் செய்தாரோ இத்தேவன் தாய்தகப்பன்
பொன்னப்ப நாரணர்க்கு பிள்ளையென வந்துதிக்க
நாரண ரைப்பெறவே நல்ல தசரதரும்
பூரணமாய் நின்றதவம் புகன்றிடவே கூடாது
பன்னீரா யிரம்வருசம் பாரத் தவசுபண்ணி
முன்னூறு வாரமதாய் உலகளந்தோர் ராமருரு
கண்ணாளர் தந்தமக்கு கற்பகம்போ லித்தேவன்
மதலையாகப் பிளந்து வையகத்தை ஆள்வானென்று
கதலிவாய் நாதன் கற்பித்தா ரிப்படியே
ஆருபெற்ற பேறும் அல்லப்பே றிப்பலன்தான்
பேறுபெற்ற வரிவர்தான் பிறந்த இனமதிலே
நாம்பிறந்தா லும்பெரிய நலங்கிட்டு மென்றுசொல்லித்
தாம் பிறப்போமென்று சான்றோராய்த் தான்பிறந்தார்
அவர்கள் பிறக்க ஆனதெய்வப் பூரணனை 
திவசமது பார்த்துச் செய்தார் பிறவியது 380

செய்யச் சிவமும் சிவவேதனும் மகிழ்ந்து
வைய மளந்த மாலும்பிறவி செய்தார்
கர்மக்கடன் கழிக்க கலியுகத்திலே பிறக்கத்
தர்மச்சம் பூரணனைத் தரணிப் பிறவிசெய்தார்
செய்த சடமதையும் சுமக்கச் சடம்பார்த்து
மெய்யிசையும் நாதன் மேதினியில் செய்தனராம்
சடம்பிறக்க லோகம் தட்டுமிக மாறி
உடன்பிறக்கச் செய்தார் உலகளந்தோர் கற்பினையால்
அன்று பிறவிசெய்தார் அவனிசோ தனைக்கெனவே
எண்ணமில்லை யென்று ஈசுரரு மாயவரும்
கொண்டாடி ஈசுரரைக் கூறுவா ரச்சுதரும்
கெண்டையக்கண் ணீசுரரே கேட்டீரோ யென்றனெண்ணம்

திருமால் கலைமுனிக்கு அருளல்

பஞ்சவர்க்கு அஞ்சல்செய்து பார்மீதில் நானிருக்க
வஞ்சகநீ சக்கலியன் வந்ததுகண் டேபதறி
நடுநடுங்கி நானோட நல்லகலைக் கோட்டுமுனி
பொடுபொடென வந்தான் போற வழிதனிலே
ஏன்காணும் மாயவரே எய்த்திளைத் தோடுவதேன்
கண்காணாப் போறேனென கலைக்கோட்டு டனுரைத்தேன்
என்ன விதத்தாலே என்றே யவனிசைய
சொன்னதுறு கலியன் சூட்சியினா லென்றவுடன் 400

அப்போ முனியும் அவனேது சொல்லலுற்றான்
இப்போநீ ரோடுகிறீர் இவனை யழிப்பதற்கு
எப்போ வருவீர் இசையுமென்றான் மாமுனிவன்
அப்போ முனியோடு அருளினது நீர்கேளும்
மாமுனியே நீகேளு வஞ்சகநீ சக்கலியை
நாமுன்னின்று கொல்ல ஞாயமில்லை கேட்டிடுநீ
கலியனுட கண்ணு கண்டால் பவஞ்சூடும்
திலிய அவனுயிரைச் செயிக்கயெவ ரால்முடியும்
முன்னின்று கொல்ல மூவரா லுமரிது
பின்னின் றவனவனால் பேசாதே மாழவைப்பேன்
வல்லமையுங் காட்டேன் மாநீசன் கண்ணின்முன்னே
உற்பனமுங் கொடேன் ஒன்றறியா நின்றிடுவேன்
வந்தேனெனச் சொல்வார் வரவில்லை யென்றிடுவார்
என்றன்பே ரோகாணும் யாரோஎனச் சொல்வார்
இதோவந்தா னென்பார் இவனில்லை யென்றிடுவார்
அதோவந்தா னென்பார் அவனில்லை யென்றிடுவார்
இப்படியே சூட்சமொன்று எடுப்போம்நாம் மாமுனியே
எப்படியு முள்ளறிவோர் எனையறிவார் மாமுனியே
அறிந்தோ ரறிவார் அறியாதார் நீறாவார்
செறிந்தோர்கள் வாழ்வார் சேராதார் போய்மாழ்வார்        420

சாத்திரத்தி லுந்தோன்றேன் சதுர்மறையைத் தாண்டிநிற்பேன்
சேத்திரத்தி லுமடங்கேன் செய்தவத்தி லுமடங்கேன்
அன்பிலு மடங்கேன் அறத்திலு மேயடங்கேன்
வம்பிலு மடங்கேன் வணங்கிடி லுமடங்கேன்
கும்பிடி லுமடங்கேன் குவித்திடி லுமடங்கேன்
நம்பிடி லுமடங்கேன் ஞானத்தி லுமடங்கேன்
யோகக் கிரியை உறுசரிதை யிலடங்கேன்
விற்பனத்தி லடங்கேன் வினோத மதிலடங்கேன்
சொற்பனத்தி லடங்கேன் தெரிசனத் திலடங்கேன்
கனாவி லடங்கேன் கைகாட்ட லிலடங்கேன்
அனாவி லடங்கேன் அச்சரத்திலு மடங்கேன்
இத்தனையிலு மடங்காது இருந்து பகைமுடிப்பேன்
என்றுநான் சொல்ல ஏற்றகலைக் கோட்டுமுனி
மன்றுதனில் வீழ்ந்து மறுகியழு தேபுலம்பி

மண்ணிலு மடங்கா மரத்திலு மடங்கா
மறையிலு மடங்கா பலவசத்திலு மடங்கா
கண்ணிலு மடங்கா கருத்திலு மடங்கா
கவியிலு மடங்கா பலவிதசெபிப் பிலுமடங்கா
எண்ணிலு மடங்கா இகத்திலு மடங்கா
இறையினி லடங்கா இரங்கிலு மடங்கா
ஒண்ணிலு மடங்காத உனைவந் தடைந்திட
உரைத்திட மருளென பதத்தடிமிசை விழுந்தான்

மறையினி லடங்கா இறøயினி லடங்கா
வணங்கிலு மடங்கா பலவகையிலு மடங்கா
துறையினி லடங்கா தொல்வியி லடங்கா
சுகயினி லடங்கா சுருதியி லடங்கா
உறவிலு மடங்கா ஒளியிலு மடங்கா
உகத்திலு மடங்கா ஒருவிதத்திலு மடங்கா
புறத்திலு மடங்கா அகத்திலு மடங்கா
புகழ்ந்துனை யடைந்திட வகுத்துரையென பதத்தடிவிழுந்தான் 440

சரியையி லடங்கா கிரியையி லடங்கா
சையோகத்தி லடங்கா ஞானத்தி லடங்கா
கருத்தினி லடங்கா கலைக்கியானத் திலடங்கா
கனாவிலு மடங்கா கருவிலு மடங்கா
உருவிலு மடங்கா உருகினு மடங்கா
ஒன்றிலு மடங்காத உனைவந் தடியாருன
தருகினி லடங்கிட அருளுரைத் திடுவென
அருள்முனி பதத்தடிமிசை விழுந்தான்

உகத்திலு மடங்கா ஓதிலு மடங்கா
உணர்விலு மடங்கா உற்பனத் திலுமடங்கா
தவத்திலு மடங்கா தழுவிலு மடங்கா
தனத்திலு மடங்கா தயவிலு மடங்கா
அகத்திலு மடங்கா புறத்திலு மடங்கா
அசத்திலு மடங்கா புசத்திலு மடங்கா - மனத்
தகத் தடக்கியுன் பதத்தடி பணிந்திட
வகுத்துரை யருளென பதத்தடிமிசை விழுந்தான்

ஓரெழுத்து மீரெழுத்தும் உற்றபர மூன்றெழுத்தும்
ஆறெழுத்து மஞ்செழுத்தும் ஆனா அரியெழுத்தும்
ஏதெழுத்திலு மடங்காது இருந்துபகை முடிப்பேனென
ஓதினீரே அய்யா உலகளந்த பெம்மானே
எட்டாப் பொருளே எங்கும் நிறைந்தோனே
கட்டாக் கலியைக் கருவறுக்க வந்தீரால்
நாங்களுமைக் கண்டு நலம்பெறுவ தெப்படித்தான்
தாங்கள் மனதிரங்கித் தான்சொல்ல வேணுமென்றான்
அப்போ முனிக்கு அருளினது நீர்கேளும்
இப்போது மாமுனியே இன்றுநீ கேட்டதுதான்
ஒருவ ரறியாத உபதேசங் கண்டாயே
கருதி வருந்தினதால் கட்டுரைப்பேன் கேட்டிடுநீ 460

எனக்கா கும்பேர்கள் இனங்கேளு மாமுனியே
புனக்கார மில்லை பூசை முறையுமில்லை
கோவில்கள் வைத்துக் குருபூசை செய்யார்கள்
பூவதுகள் போட்டுப் போற்றியே நில்லார்கள்
ஆடு கிடாய்கோழி அறுத்துபலி யிடார்கள்
மாடு மண்ணுருவை வணங்கித் திரியார்கள்
என்பேரு சொல்லி யாரொருவர் வந்தாலும்
அன்போ டவரை ஆதரிக்கும் பேராகும்
இரப்போர் முகம்பார்த்து ஈவதுவே நன்றாகும்
பரப்போரைக் கைசேர்த்துப் பணிவதுவே நன்றாகும்
என்பேரால் முத்திரிகள் இட்டோரே நன்றாகும்
அன்போராய் வாழ்ந்தாலும் அறிவுநினை வொன்றானால்
நாம்வந்தோ மென்ற நாமமது கேட்டவுடன்
தாம்வந்து வேடமிட்டோர் சாதியது நன்றாகும்
அல்லாமற் கேளு அரிய முனியேநீ
எல்லா அமைப்பும் ஏலமே விட்டகுறை
எச்சாதிக் காச்சோ அச்சாதி நன்றாகும்
எவர்க்கு மிகஈந்து இருப்போரே நன்றாகும்
அவர்க்குதவி செய்வோர் அவ்வினமும் நன்றாகும்
தாழ்மையாய் வாழ்ந்த சாதியது நன்றாகும் 480

ஏழ்மையாய் வருவோம் இரப்பன் பரப்பனென
இரப்பனைக் கைகொண்டோர் எனையேற்றார் மாமுனியே
பரப்பனைக் கைகொண்டோர் பரமேற்றார் மாமுனியே
சினமு மறந்து செடமுழிக்கும் பேர்மனுக்கள்
நினைவுக்குள்ளே நாம் நிற்போங்காண் மாமுனியே
இனத்தோடே வொத்து இருந்துமிக வாழ்ந்தாலும்
சொன்ன நினைவதுக்குள் துயிலாமல் வாழ்வோங்காண்
மாசுக் கலியை மனதூடா டாதேயறுத்து
வாசு நினைவில் வந்துநிற்போம் மாமுனியே
பின்னுமொன்று கேளு ஒருவர்க்கோர் வாரமுமாய்
நின்றோ முனியேயினி நீசக் கலியறுக்கச்
சென்றோமே யானால் செய்யுந் தொழில்கேளு
காலுக்குள் ளேதிரியாம் கையதுக்குள் ளேதிரியாம்
மேலுக்குள் ளேதிரியாம் விழியதுக்குள் ளேதிரியாம்
கண்டெடுத்தார் வாழ்வார் காணாதார் வீணாவார்
பண்டைப் பழமொழிபோல் பார்மீதி லாட்டுவிப்பேன்
கண்டெடுத்துக் கொண்டோர் கரையேறு வாரெனவும்
தொண்டனெனக் கண்டு சொன்னேனா னுன்னோடு
தாய்தமர்க ளென்றும் தனது கிளைகளென்றும் 500

வாயுரமாய்ச் சொல்லும் வம்பரென்றும் பார்ப்பதில்லை
அன்பாகி வந்தவரை அலைச்சல்செய் தேற்பதுண்டு
வம்பான மாற்றானை வளர்த்தே யறுப்பதுண்டு
எட்டியு மெட்டாத எழைக் குணம்போலும்
கட்டியுங் கட்டாத கடிய சொரூபமதும்
வேளைக்கு வேளை விதக்கோல முமணிந்து
நாளுக்கு நாளாய் நடக்கு மதிசயமாய்
இரப்ப வடிவாய் இருந்து கலிதனையும்
சங்கி லிரந்து தான்வளர்ப்பே னன்போரை
என்றுரைக்க நாதன் எடுத்துமுனி யேதுரைப்பான்
மன்று தனையளந்த மாயத் திருமாலே
இந்த விதமாய் எழுந்தருளி வந்திருப்ப(து)
எந்தச் சொரூபம் எடுத்தணிவீ ரெம்பொருமாள்
கேட்டான் முனியும் கீர்த்தியுள்ள ஈசுரரே
நாட்டான மாமுனிக்கு நானுரைத்தது கேளும்
எகாபரத்தை நானினைத்து ஏழுபிள்ளை ஈன்றெடுத்து
மகாபரனார் செயலால் மக்களுக்குச் சொத்தீய
நானுப தேசித்து நாட்டில் மிகவிருத்தி
மானுவஞ் சோதிக்க மகற்கு அருள்கொடுத்து
மாசுக் கலியறுத்து மக்களொரு மித்தவுடன் 520

பாசு பதங்கொடுத்துப் பாலன்கை யால்விளக்கிக்
கூப்பிடுத லொன்றில் குவலயத்தைத் தான்கிறக்கிச்
சாப்பிடுவே னஞ்சைத் தன்பாலை யாளவைப்பேன்
என்று கலைமுனிக்கு இயம்பிவந்தே னீசுரரே
அன்று மொழிந்ததுக்கு அமைத்ததுகா ணிம்மகவு
சந்தோச மாச்சுதுகாண் சங்கரரே நீருமிப்போ
வெந்தோசந் தீர்ந்துதென்று வெள்ளிக் கயிலையிலே
ஒருவிடத்தி லெக்கியத்தை ஊட்டிக் கனலெழுப்பித்
திருநடன மாடுமென்று செப்பினா ரொப்புடனே
அப்படியே நல்லதென்று அரனு முமையாளும்
முப்படியே மாலினிக்கு ஒன்பதாம் பேறெனவும்
வேதனுக்கோ ராயிரம் பிறவி யாச்சுதென்றும்
மாது உமைக்கு வளர்பிறவி ஏழெனவும்
திதுவுக்கோர் பத்தாம் செய்யப் பிறவியென்றும்
சதுர்மறைக் கேழெனவும் சாஸ்திரத்துக் கோர்நான்கும்
வானவர்கோன் றனக்கு வளர்பிறவி மூன்றெனவும்
தானவர்க் கேழெனவும் சரசுபதிக் காயிரமாம்
தொண்டர் தமக்கு சூல்பிறவி யொன்றெனவும்
அண்டர்கள் மெய்க்க அரனடன மாடலுற்றார்

திருநடன உலா

நாதன் முறையார்க்கு நற்பிறவி யொன்றுபத்தாம் 540
வேதன் றனக்குப்பிறவி ஆயிரமாம் - வெண்டரள
மாதுக்கு மாயிரமாம் மாதுமைக் கோரேழாம்
சீதுக்குப் பத்தெனவே செப்பு

இந்திரற்கு மூன்றெனவும் இறையவருக் கேழெனவும்
சந்திரற் கோரேழாம் சாற்று - நன்றியுள்ள
மறையதுக்கு மோரேழாம் மானமுள்ள தொண்டருக்கு
இறப்பிறப்பில் லாப்பேறென் றியம்பு

என்றிவகை ளெல்லா மிப்படியே வந்துதென்று
ஒன்றியுள்ள சித்தாதி ஓதினான் - பண்டையுள்ள
தாவடத்தை மேவிடத்திக் கோவிடத்தி லோமிடத்தி
நாவிடத்திப் பூண்டாடி னார்

தன்னாலே முளைத்த சற்கணையின் றண்வாங்கிப்
பின்னாலே யோர்கணைப் பீறி - பின்னாளே
பீறுங் கணையதினால் பெரும்புவியெல் லாந்தோன்றிச்
சீறுங் கலிவயதால் சென்றுதோ

வானத்தளவில் வளர்ந்த கம்பத் தண்ணருளால்
சேனைச் செகம்படைத்த செல்வமோ - மானத்த
மாகலிய னேதுவினால் வாழ்விழந் திவ்வுகமும்
போகத்தருணம் வந்து பூட்டினதிப் போது

நல்லாறு சாஸ்திரமும் நாலுமறை வேதமதும் 560
பொல்லாக் கலியினால் பொய்ச்சூடி - பொல்லாப்
பொடியக் கலியோடு பொன்றியடி வேரறவே
இடியத்தான் வந்தொத்த தின்று

பக்கம் பதினைந்தும் பார்மேடம் பன்னிரண்டும்
வக்கணைக் கோளொன்பதுவு மங்கி - அக்கிகொண்(டு)
அழிந்த கலியோ டலமாந் தழிந்திடவே
சுழிந்தகன லாறுவந்து சுற்றிச்சோ

மாந்திர தந்திரத்தை வைத்திய வாகடத்தைச்
சூழ்ந்திருந்த அட்சரத்தைச் சோதித்து - ஏய்ந்திருந்த
இழகு கலியோ டிம்முறையெல் லாமொடுக்கிக்
களவறுக்கச் சோதியொன்று காணுதோ

அய்யமிட் டுண்ணாத அரும்பாவி யாவரையும்
பொய்யரையும் வெட்டிப் பெலியாக்கி - மெய்யிழந்து
நையுங் கலியோடு அனலாவிக் கொண்டெரிக்க
வெய்யவன்போல் சோதியொன்று மேவுதோ

பத்திசோ தித்தே பலநாளுங் காத்திருந்த
வித்தகனை வந்து வேண்டார்மேல் - வீடிழந்து
செத்திறந்து தீநரகச் சீக்கூட்டி லேயடையக்
கொத்தியருந் தப்புழுக்கள் கொஞ்சுதோ

பாங்கலிய னேதுவினால் பண்டுண்டு செய்ததெல்லாம்       580
மூங்கிக் கலியதனுள் மூடி - மூச்சுவிட்டு
ஓங்குவ தோங்கி உறங்குவது தானுறங்கி
மூங்கிக் குளிப்பதுநாள் முற்றுதோ

இலச்சைகெட்ட பாவி யென்றுவந்தா னன்றுமுதல்
நற்சடலங்கள் நல்வகைகள் நாடிழந்து - நாணமுற்றுப்
பட்சிமுதல் மாமிருகம் பால்நரிகள் கற்றாவும்
அச்சமற்று வாழ்புவியொன் றாகுதோ

பொல்லாத் துரங்கள்கொண்ட பேய்ச்செடிகள் தானொழிந்து
கல்லாத புல்லர் கருவொழிந்து - எல்லாம்
நல்லோராய்ச் சாகாமல்நாளும் நகரொன் றானதுக்குள்
சொல்லொன்றாலாள சோதியொன்று தோணுதோ

தாணுமால் வேதன் தற்பொருளாய் முப்பொருளும்
ஆணுவமா யொன்றி லடங்குதோ - அஞ்செழுத்தும்
ஆனா அரியெழுத்தும் ஆங்கார மூன்றெழுத்தும்
ஓநமோ வென்றதுக்குள் ளொடுங்குதோ

ஆகாத்த வஸ்துவெல்லாம் அழித்துநர கத்திலிட்டு
வாகாய்க் குழிமூட வந்துதோ - சாகாத
சனங்கள்பல வஸ்துவையும் தர்மபதி ராச்சியத்தில்
இனங்களொன்றாயாள ராசாவொன் றாகுதோ

பொன்னூற்றுத் தன்னூற்றுப் புரவுதன்னால் விளையூற்று       600
முன்னூற்று யோசனை யுலாவுசுழி - பன்னூற்றுப்
பாலூற்று மேலூற்றுச் சேலூற்று வாலூற்று
மாலூற்று மாபதியு மாகுதோ

செப்பொத்த பொன்னும் சிவமேடைசிங் காசனமும்
முப்பத்தி ரண்டறமு மோங்குதோ - ஒப்பற்ற
ஊர்தெருவு மொன்றதுக்குள் ஓர்யோசனைத் தெருக்கள்
சீர்பதினா யிரத்தெண் சேருதோ

தெருக்கள்பதி னாயிரத்தெண் செந்திருமால் வாழ்பதிக்குக்
குருக்களொன்று விஞ்சையொன்று கூறுதலோ - மருக்கள்
மாறாமல் வாழ்பதிக்கு மணங்கொடுத்து நிற்பதல்லால்
வேறார்க ளும்பறிக்க வேண்டுமோ

பொற்மைப் பதியில் பொன்வாச லொன்றதிலே
தர்மமணி யொன்று தாங்குதோ - தருமமனு
மணியினது கூறறிய மணிகணீரென் றதல்லால்
இனியிரு ளில்லா தேகுதோ

அலைந்தலைந்த சூரியனும் அவனலையச் சாயாமல்
நிலந்தெரிய எப்போதும் நேரே - குலைந்தலைந்த
கார்மேகத் தட்டதெல்லாம் கூண்டுடைந்து வானமதில்
ஊர்மேகமெல்லம் ஒருமேக மாகுதோ

தோணிக்கச் சிந்தை துலங்கிவெளி காட்டுமல்லால் 620
காணிக்கை யென்றயிறை காணாதோ - மாணிக்கக்
கல்லால் வளர்ந்தபதி காணுமொளி யல்லாது
பொல்லாரெனப் பேச்சுப் போச்சுதோ

ஈசர் நடன மிருபத்து ஒன்றதுக்குள்
தேசமது தீதுநலஞ் செப்பினார் - வாசமுடன்
வன்னி யமர்த்தி மாதுமையைத் தானோக்கி
உன்னிச் சிவமுரைப் பார்

ஈசர் மகிழ்ந்து ஏந்திழையைத் தானோக்கி
வாச முடனீசர் வகுப்பா ரம்மாதோடு
முன்னே மொழிந்த முற்றாண்ட வமதுக்குப்
பொன்னே யிந்நேரம் புரிந்ததுநீ கண்டாயே
அப்பொழுது ஈஸ்வரியும் அரனை மிகப்போற்றி
இப்பொழுது என்னுடைய இராச மகாபரனே
செப்போடு வொத்தச் சிவனே சிவபரனே
ஆடினீரே தாண்டவந்தான் அநேக வளங்கள்சொல்லிப்
பாடினீரே அய்யா பாட்டு வழுகாதே
தாண்டவ மாடிப்புரிந்தால் சத்திசிவம் வரைக்கும்
மாண்டாரைப் போற்கிடந்து மறுத்தெழும்ப வேணுமல்லோ
அல்லாம லென்னுடைய அண்ணர் நினைப்பதிலே
நல்லவரே கொஞ்சம் நானறிந்தது கேளும் 640

காரணமா யண்ணர் கலியுகத் தைமுடிக்க
நாரணர்தான் பூமியிலே நடப்பது நிசமானால்
நம்மையு மிங்கிருக்க ஓட்டார்காண் நாரணரும்
எம்மழையி லானாலும் எவ்வெயிலி லானாலும்
கொந்தலி லானாலும் கூர்பனியி லானாலும்
கந்தத் துணிகள்தந்து கையில்திரு வோடுதந்து
என்றனக்கு நல்ல இளங்குறத்தி வட்டிதந்து
மைந்தன் சரவணற்கு மறிப்பு மிகக்கொடுத்துப்
பிரமனுக்குக் கோலமிட்டுப் பிசாசுத னைவிரட்டி
வரமுள்ள தேவதைக்கு மாற்றி யுருக்கொடுத்து
லோகமதில் நம்மையும் உகக்கோலங் களிட்டி
வேகத்துடனே மேதினியெல் லாந்திரிந்து
கலிக ளகலக் காண்டங் கழிக்கவென்று
பலிகாண வைப்பார் பரசோ தனைக்கனுப்பி
இப்படியே தோணுதுகாண் என்னுடைய சிந்தையிலே
எப்படியும் வந்து இதுசமையு மீசுரரே
என்று உமையாள் ஈசர்தனை வணங்கி
அன்று மொழிந்து அவள்நிற்கும் வேளையிலே
நாரா யணரும் நல்ல சிவனிடத்தில்
சீராக வந்து தெண்டனிட்டுத் தானிருந்தார் 660

இருந்து மாலோனும் இருதயத்தி னுள்மகிழ்ந்து
பொருந்துவிழி தங்கையோடு புகலுவா ரம்மானை
என்னுடைய தங்கையரே எனைமேனி யாக்குவளே
உன்னுடைய தன்பொருட்டால் உலகளந்தோ னானாகி
நாட்டி லென்பேரு நடத்திவைத்த நன்னுதலே
கோட்டு வரையாளே கோவே யென்தங்கையரே
நீயும் நம்மீசுரரும் நீணிலத்தில் போகவென்று
நானும் நினைத்திருந்தேன் என்று நவின்றாயே
ஈஸ்வரிக்கு மீசுரர்க்கும் இந்த நினைவானால்
தேசமதில் போக வேண்டாமென்று சொல்வாரோ
நானுங் களைவலிய நாட்டிற்போ மென்றிலனே
தானுங்கள் தம்நினைவில் தரித்ததுபோ லேபோவும்
நீங்கள் நடப்பதென்றால் எனக்குவெகு சந்தோசம்
தாங்கள் மனதிரங்கி சாற்றிமிகப் போவுமென்றார்
அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தானோக்கி
மைப்போடுங் கண்ணினிய மைத்துனரே யென்றாவி
சொல்லுச் சொல்லாதபடி சொல்லுதற்கு உம்மையல்லால்
அல்லும் பகலும் அலைந்தாலுங் கிட்டாது
போங்களென்று சொல்லாமல் புத்திசொன்னாப் போலேநீர்
தாங்கி யுரைத்தீரோ சத்தியுள்ள மைத்துனரே 680

புத்தியிது நன்று புண்ணியநா ராயணரே
தத்தியுட னடக்க தருணமெப்போ தென்றுரைத்தார்
நடக்கக் கருமமிது நல்லதுதா னென்றுசொல்லி
அடக்க முடனே அய்யாநா ராயணரும்
ஒத்திருந்து தங்கள் உற்பனமா யாராய்ந்து
புத்திபோல் வாசகங்கள் பூத்தான மாயெழுதி
நாட்டு நருளறிய நடைசீவ செந்தறிய
காட்டு மரமறிய கல்லப்பு தானறிய
புற்பூ டறிய பூமிதெய் வாரறிய
நற்பறிந்து பேய்கள் நடுங்கி மிகஅறிய
சேட னறிய சிறுவாய்வு தானறிய
மேக மறிய மேலோர்கள் தாமறிய
பூக மறிய பொழுதுசந் திரனறிய
நட்சேத் திரமறிய நமனறிய கொளறிய
பொய்ச்சரியை கிரியை பேர்நா லுந்தானறிய
வேத மறிய விளங்கு மறையறிய
வாதை யறிய மன்றுபதி னாலறிய
சங்கறிய முத்தறிய சகலமச்ச முமறிய
அங்கறிய நாம்படைத்த எல்லோருந் தானறிய
எழுதி விடுவோங்காண் ஏற்றரிய புத்திவைத்து 700

பழுதுவைத்தா ரென்று பார்பலதுஞ் சொல்லாமல்
நம்பேரில் குற்றம் நகத்தளவு மில்லாமல்
பம்முதலாய் நாமும் பரிந்தெழுதி தான்விடுவோம்
என்று திருமாலும் இறவாத ஈசுரரும்
மன்று படைத்த மறையோனும் பார்வதியும்
சரசு பதியும் சத்தியுள்ள லட்சுமியும்
விரசு முனிமாரும் வேத மறையோரும்
சாஸ்திரரும் கின்னரரும் சங்கத் துறைவோரும்
பார்த்திவனுந் தெய்வ பாவாணர் தாமுதலாய்
வானவருந் தேவர்களும் மற்றுஞ்சித் தாதிகளும்
தானவரும் வேதத் தம்புருக் காரர்களும்
சங்கம் வரையும் தாண்டவர்கள் தாமுதலாய்
எங்கெங்கு முள்ள இருஷிமுதல் தான்வருத்தி
எல்லோருங் கயிலை இடம்விட் டெழுந்தருளி
வல்லோர்கள் வாழும் வைகுண்ட மீதில்வந்து
கங்கைநதி கண்டு கறைக்கண்டர் தேவர்வரை
கங்கை தீர்த்தமாடி கிருஷ்ணர் பதிபுகுந்து
மேடை விதானமிட்டு மிகுமேடை பொன்னழுத்தி
வாடை கமழவிட்டு வானவர்கள் பாடவிட்டு
எக்காள டம்மானம் எங்கு முழங்கவிட்டு 720

மிக்க புராணக்கலை மிகுமறையோர் போற்றவிட்டு
ஆகமங்கள் போற்றவிட்டு அரம்பையர்கை காட்டவிட்டுப்
போகமுனி சித்தரெல்லாம் புராணகவி யோசையிட்டு
மும்முதற்குத் தேவரெல்லாம் முறையிட்டு வாழ்த்தவிட்டுச்
சங்குத் தொனிகளிட்டு சகலோரும் போற்றவிட்டு
இத்தனை நற்சிறப்பும் இதமா யலங்கரித்து
வித்தையருள் தண்டரள விழியாளைத் தான்வருத்தி
அப்போ சரசுபதி ஆனந்த மேபெருகி
இப்போ எழுந்தருளி இன்பமுடன் போகவென்று
கங்கை நதிமூழ்கி கிரணப்பச்சை யாடைபெய்து
சங்கையுட னாபரணம் சரசு பதியணிந்து
குழல்முடித்து குழையில் குவிந்ததங்கத் தோடணிந்து
வளையல் முறுக்குமிட்டு மாதுசந் தோசமுடன்
பச்சைநிறக் காப்பணிந்து பவளமணித் தண்டையிட்டு
மச்சமதில் மையெழுதி மகிழ்ந்து மூக்குத்தியிட்டுக்
கொண்டைதனில் தேமலரைக் குவிய மிகச்சூடி
பொற்சரிகைச் சேலை பெரியயேத் தாப்புமிட்டு
அச்சரக்கைத் தோழி அரம்பையர்முன் னாடிவர
அன்ன நடைநடந்து அனல்கொழுந் திட்டாப்போல்
வன்ன அழகுடனே வந்தாள்திரு முன்பதிலே 740

மாது வரவே மறையோனும் மாயோனும்
ஏதுகோ லமெனவே எண்ணமதி லுன்னினராம்
உன்னித் திடமாய் உளமகிழ்ந்து மாயவனும்
கன்னி தனைப்பார்த்துக் கறைக்கண்டர் தானுரைப்பார்
வன்னத் திருவடிவே மறையோனி னோவியமே
அன்ன மடமாதே அரசுக் குகந்தவளே
கருத்துடைய சோதி கவியுடையீ ருந்தனையும்
வருத்தின காரியந்தான் வகுக்கக்கே ளொண்ணுதலே
நாட்டிலொரு நீசன் நன்றியறியாப் பிறந்து
மேட்டிமையாய் லோகமெல்லாம் மெய்யழித்தான் கண்டாயே
கோட்டிப் பவம்பிறந்து குருநீதி யைக்கெடுத்தான்
கேட்டிருக்கக் கூடாது கெடுநீசன் பொல்லாங்கு
நம்மை நினையாததுதான் நமக்குசற் றெண்ணமில்லை
செம்மையுள்ள சான்றோரைச் செய்தபங்க மேற்கலையே
தெய்வப் பிறவியல்லொ திசைவென்ற சான்றோர்கள்
மெய்வரம்பை யெல்லாம் மிகக்கெடுத்தான்மாபாவி
கற்பகலாப் பெண்களுட கற்புக்கிரங் காதிருந்தால்
உற்பனமோ நாமள் உடையபர னென்றாமோ
எளியவனை வம்பால் இடுக்கஞ்செய் தேயடித்தால்
விளியிட் டழுதாலும் மேதினியிற் கேட்பதில்லை 760

கேளாத காரணத்தால் கீர்த்திகொண்ட பேரெளியோர்
நாளான நாள்வழியாய் நம்பிநம்பேரில் வைத்தார்
அல்லாமல் நம்முடைய அரிதன்மகா நாமமதை
இல்லாம லேமறைத்தான் இயல்புகெட்ட மாநீசன்
ஆனாலும் பாரமில்லை அன்னீதம் பொறுக்கரிது
மானாபர ஞாயமதை வரம்பழித்தான் மாநீசன்
ஆகமத்தைக் கூறழித்தான் அன்னீத மாபாவி
தாக மடைந்தார்கள் தவசுமுனி மார்களெல்லாம்
நீசப் பாசாசு நீணிலத்தைக் கொள்ளைகொண்டு
தோசப் பயலோடு துணையாய் மிகக்கூடிக்
கெடுக்குதுகாண் பசாசு கேட்பார்க ளில்லாமல்
கொடுக்கவொன் றில்லா நருட்பார்த்துக் கொல்லுதுகாண்
அதுவே யொருகொடுமை அநேகம் பொறுக்கரிது
எதுவும் வரம்புதம்பி இருக்குதுகாண் வையகத்தில்
ஆனதால் நாங்கள் அவனிதனிற் போயிருந்து
மானமுறை சோதித்து மனுவிடுக்கந் தான்தீர்த்து
நாட்டிலுள்ள குற்றம் நாங்கள்பார்த் துத்தீர்த்து
ஓட்டுவதை யோட்டி உறைப்பதை யுறைப்பித்து
நாடையொரு சொல்லதுக்குள் நலமாக வாழ்விக்கவே       
பேடையன்ன மாமயிலே பெண்ணரசே இப்போது 780

நாங்கள் நடப்பதற்கு நாளான நாளிதுவே
ஆனதால் பாவி அவனிழுக்குச் சொல்லாமல்
மானமுள்ள புத்தியைப்போல் வாசகமொன் றேயெழுதி
வருவோமென அயச்சால் மாபாவி தானறிந்து
கருவி குழறி கற்பினைக்குள் ளாகுவதும்
என்னவோ வென்று இடும்புசெய்வ துமறிய
அவனறிய விட்டதுபோல் அவனிபதி னாலறிய
எவரும்புற் பூண்டுவரை எவ்வகையுந் தானறிய
எழுதியொரு வாசகந்தான் இப்போவிட வேணுமென்று
முழுது முன்னிங்கே ஓடிவா வென்றதுதான்
அப்போ சரசுபதி ஆனஅயன் மாமயிலும்
இப்போ திவ்வகைக்கு யானென்ன செய்கருமம்
எல்லாங் கிருபை எம்பரனே யுன்செயலு
அல்லாம லென்றனக்கு ஆகுமோ ஏதாலும்
ஆட்டுவதும் நீயல்லவோ ஆடுவானும் நீயல்லவோ
ஓட்டுவதும் நீயல்லவோ ஓடுவானும் நீயல்லவோ
சொல்லுவதும் நீயல்லவோ சொல்லவைப்பானும் நீயல்லவோ
அல்லும்பகல் நீயல்லவோ அழியாத வனும்நீயல்லவோ
எல்லா முமது கிருபை யெனக்கல்லாது
சொல்லீது வந்ததென்ன சுவாமியெனப் பணிந்தான் 800

மாது திருமால் மலர்ப்பாதம் போற்றிடவே
ஆதித் திருமால் அவரேது சொல்லலுற்றார்
நீயுரைக்க நானெழுதி நீணிலத்தில் விட்டதுண்டால்
வாயுரைக்கக் கூடாது மற்றோர்க ளாராலும்
வம்புரைக்கக் கூடாது வம்புரைத்தால் வன்னரகம்
உம்பதுவே யல்லால் உறுகெதிகள் காணார்கள்
ஆனதா லுன்வாக்கும் அரியச்சரமுங் காண்பித்தால்
மானமென்ன வாகுமென்று வகுத்துரைத்துப் பார்ப்போம்நாம்
அப்போ சரசுபதி அன்போ டுளமகிழ்ந்து
செப்புகிறாள் நல்ல திருவாசகந்தா னம்மானை

கலையொடு கலையைத் தாக்கிக் கண்ணின்மேல் கருணை நாட்டி
மலையொடு மலையைத் தாண்டி வளர்ந்தவன் பதமே கண்டு
சிலையொடு சிலையி னாளும் சிவபரா கிருபை யென்றே
அலைதலை முழக்கம் போலே அவளுரை கூற லுற்றாள்

கூறிய வாசகத்தை யிந்தக் குவலயத் தோர்கள் காண
மீறிய மொழிகள் சொல்லி விளம்புவர் நாச மாகும்
தேறிய பூதத் தோடு தேர்ந்துணர்ந் தவரே வாழ்வார்
கூறிய வாசகத்தை யுள்ளங் கொண்டவர் குருவைக் காண்பார்

ஒருதிரு விபூதி யுண்டை ஒருயிரு மிச்ச மாகும்
ஓருதிடத் தேங்காய்ப் போலும் ஒருமனத் திரணை போட்டுக்  820
கருதிட வெற்றிலை பாக்கும் கனிந்திடு வோர்க்கு மூவர்
வருகிட ஞாய மெய்யின் வழியிது வாகுந் தானே

மனுமொழி யிதுவா மென்று மதத்துடன் பேசு வோர்க்கு
இனிதல்ல வீண்தா னென்று இயம்பிய பகைஞர் தம்மை
குனிதவள் துர்க்கை சென்று கொன்றவள் நரகம் பூத்தி
கனிதுடன் துர்க்கை வாரி கடல் தீர்த்த மாடுவாளே

வேறு

எறும்புகடை யானைமுதல் எண்பத்துநான் குயிர்கள்
எழுகடல் பதினாலு புவிகளும்
இரதிமதி சூரியர்கள் பருதி பாலாழியும்
இயல்வானம் வாயு முதலாய்
தெறும்பு மாமலை மாமரச் சோலையும்
சேடனுந் தலைமோடனு மறியவே
தென்கீழத் தேவரு மிங்குள்ள மூவரும்
தேசதெய் வேந்திர னறியவே
வாச முனிவோர்களும் வேதசன் னாசியும்
மறையாறு சாஸ்திர மறியவே
மண்டல மளந்தகை கொண்டெழுதும் வாசகம்
மண்டலர்க ளெவரு மறியவே
வறும்பகல் தொளாயிரத்து தொண்ணூற் றெட்டாண்டினில்
வளர்ஸ்ரீ சாம்பசிவ மூர்த்தியும்
பராபர ஸ்ரீராமரும் பதியேறும் மூர்த்தியும்
பார்த்திந் தக்கலி யுகத்தில்
படூரநீ சக்கலியால் வரும்வாறு வண்மையாய்ப்
பகர்ந்து திருவாசக மெழுதிப்
பலநூ லறிந்தவ ரெவர்க ளாயினும்
பக்தியுட னெக் காலமும்
பணிந்துதிரு வாசகத்தை முத்தியணைந் தோர்க்கு
மிகுபல னுண்டாம் பகரக்கேளு
நத்தியுடன் பூலோகக் கலியுகா தேசத்தில்
நடக்கு முறைதானுங் கேளீர்

திருவாசம் - 1

நல்ல வீரபுரந்தரத் தர்மராசா வங்கிசத்திலே நாடும் ஒரு மதலை பிறந்து வந்தவுடன் நல்ல அருணாசலத்திலே வாலிபப் பிள்ளையாயிருக்கிறார். அந்தப் பூலோகக் கலியுகத்திலே ஆசாரமாயிருக்கிற பேர்களும் அழுக்கான புத்திமதியா யிருக்கிற பேர்களும் அவரவர் ஆங்காரமாகியே அழிந்து போவார்கள். அதின்மேல் பதினெட்டுத் துர்க்கையம்மாள் பிறந்து அந்தக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே வருகிறார்கள். வந்தவுடனே மூன்றுநாள் இருள்மூடி ஆனைத் துதிக்கைபோல் மழைபெய்யும். அதிலே சில துர்ச்சனர்களெல்லாம் மாண்டு போவார்கள். அதின்மேல் பக்தியாயிருக்கிற பேர்களுக்கும் பிள்ளை யில்லாமலிருக்கிற பேர்களுக்கும் கண்ணில்லாமலிருக்கிற பேர்களுக்கும் தனமில்லாமலிருக்கிற பேர்களுக்கும் பராபர மூர்த்தியும் சாம்பசிவ மூர்த்தியும் ஸ்ரீராமச்சேயரும் தீட்சையாகித் திருமனதிரங்கிப் பக்திகாரணங்களைச் சோதித்துப் பகிர்ந்து அவரவர் கேட்ட வரங்களைக் கொடுப்பார்கள்.

இன்னுஞ்சிறிது நாளையிலே சிலபேர்கள் தெய்வீகமாய்ப் போவார்கள். முன்னுக்கு மழைதட்டும் உலகிற்பல பல வஸ்துவும் பலிக்குமென வகுத்தார். சிலநீசர் மிகக் கறுப்பை நினைவில்லாத்தொட்டு மிகப் பாசமடைந்து அலைந்து அழிந்து போவார்கள். வாலி சுக்ரீபனும் பண்டாரமாகிப் போவார்கள். வாச்சி கொழு கலப்பையெல்லாம் நாசமாகிப் போய்விடும். முன்னாலே துலுக்கர் தம்மை நாசம் பண்ணுகிறதற்காகவே துர்க்கையம்மாளைப் பிறவி செய்தனுப்புகிறோம். பிராமணர் நன்றாய் சுகத்துடன் வாழ்வார்கள். புவியில் முகத்துலிங்க மில்லாத பேர்க்குப் பிரமதேவரை யனுப்புகிறோம். பிரமதேவர் புவிமீதில் வந்து பக்தி காரணங்களைச் சோதித்துப் பொல்லாத பேரைத் தெரிந்து பிடித்துப் புதுக்கிராம தேசத்தில் வாழுந் தேவதைக்குப் பூசைப்பண்ணிப் போடுவாரெனப் புகட்டினார்.

காவேரியாற்றுக்குள்ளே மூன்று பொதி மங்கிலியம் கவிழ்ந்து அடையவேணுமென்றும் காசினியில் ஒரு ஏழு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்பிள்ளையை அடர்ந்து பிடிப்பார் களென்றும், அறுத்த மங்கிலியத்தை மிகுத்துக் கட்டுவார்களென்றும், இன்னுஞ்சிறிது நாளையிலே கேள்விகேளாமலிருக்கிற பேர்களும் துர்ச்சனராயிருக் கிறபேர்களும் வர்த்தகனாயிருக்கிற பேர்களும் தம்மில் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டு மாண்டுபோவார்கள், போனபேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷரைத் தெரிசனம் பண்ணிக் கொண்டு சர்வபாக்கியத்திலே யடைவார்கள்.

மூன்று லோகத்துக்கு ஒரு வால்வெள்ளி யுண்டாக்கி நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம். அதினால் மானிடரெல்லாம் உறழ்ந்து உட்கொள்ளைப் பிறக்கொள்ளை யடிப்பார்களென்று நமக்கு நன்றாய்த் தெரியும். நாமதற்குமேல் பூலோகக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே பண்டார வேசமாய் வருகிறோம். நாம் வருகிறபோது மண்ணெல்லாம் கிடுகிடென்றாடும், மலையும் வானமும் முழங்கித் திடுக்கிடும், அப்போது அதிலே அநேக துர்ச்சனர்களெல்லாம் மாண்டு போவார்கள். போனபேர்கள் போக இருக்கிறபேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். மந்திர தந்திர வைத்தியங்களெல்லாம் மறைந்து போய்விடும். வாதை பேய்களெல்லாம் வட கயிலாசத்திலே போய்ச் சட்டுத்தீர்ந்து போவார்கள். ஏழு சமுத்திரத்திலே மூன்று சமுத்திரம் நீருள்வாங்கிப் போய்விடும். ஒரு சேர்வை விபூதி ஆறு சக்கரத்திற்கு விற்கவும், ஒரு லிங்கம் மூன்று வராகனுக்கு விற்கவும், ஒரு கழஞ்சிச் சலமெடுக்கவும், இரண்டு நாழிகை வழிக்கு ஒரு தண்ணீர் பந்தலும், மூன்று நாழிகை வழிக்கு ஒரு தர்மசாலை மடமும் நன்றாய் முடியும்.

தர்மங்கொடுக்கிற பேர்களுண்டு வாங்கிறபேர்களில்லை யென்று சொல்லுகிற வெயிலாள் மடக்கொடியாள் வயிற்றிலே நாடுமொரு மதலை பிறந்து பத்து வருசமாச்சுது. நாங்களும் மகா அருணா சலத்திலே வாலிபப் பிள்ளையா யிருக்கிறோம். அந்த வாலிபப் பிள்ளை என்ன சொல்கிறா ரென்றால் வீர புரந்தர தர்மராசா வழியிலே விகிநாராயணர் இங்கே வந்து மூன்று மாதத்துக்குத் தவசுபண்ணி இரண்டு மாதத்துக்கு மேல் வருகிறார். வந்தவுடனே அந்நியோன் னியக் கலகமாகும். அந்தக் கலகத்திலே ஒருவருக்கொருவர் சத்தியமாய்ப் போவார்கள். போன பேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பாக்கியத்தைக் கொடுப்போம்.

பாக்கியங் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழு வோர்க்கு
நோக்கிய கருணை யுண்டாம் நோயில்லா திருந்து வாழ்வார்    840
தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு
வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே

தினமொரு நேர மெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்
கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்
துணிவுடன் கேட்டோ ருற்றோர் தொலைத்தனர் பிறவி தானே

வாசித்தோர் கேட்டோ ருற்றோர் மனதினி லுணர்ந்து கற்றோர்
ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத் தோடும் சிறப்புட னிருந்து வாழ்வார்

திருமொழி வாசகந் தன்னைத் தேசத்தில் வருமுன் னாக
வருவது திடனா மென்று வழுத்தினோம் தொளாயிருத்து 98ல்
ஒருதிருக் கூட்ட மாக ஓராயிரத் தெட்டா மாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே

வருத்தினோ மம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாக்கிக்
கருத்தினுள் ளகமே கொண்டு கவனித்தோ ரவர்க்கே தக்கும்
உருத்தில்லாக் கேட்போ ரெல்லாம் ஓருரை வெளியே காணார்
சிரித்துரைக் கேட்போ ரெல்லாம் சிவபொருள் வெளியே காண்பார்

உலகில் மனுக்கள் தமிழாலே உவமை யுரைத்து விட்டாப்போல்
கலக முடனே யென்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை 860
அலகைத் துளைத்து நரகதிலே ஆணி யறைந்து அவனிதனில்
குலையக் குலைத்துத் தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே

எந்தன் மொழியு மென்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில்
சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத் தெரியத் திறமா யெழுதி வைத்தேன்
எந்தன் பெருமான் திருமொழியை எடுத்தே வாசித் துரைத்தோரும்
சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியுங் காண்பாரே

காண்பார் தர்மக் கண்காட்சை கண்டே மரண மில்லாமல்
காண்பா ரென்றுங் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் கண்ணாடி
காண்பார் நீதக் கண்ணாலே கருணா கரராய்க் கவ்வையற்றுக்
காண்பா ரென்றுங் கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே

இந்த மொழியைத் தூஷணித்த இடும்பர் படும்பா டதுகேளு
கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணு முருகிக் காலுழன்று
குந்தக் குடலும் புறம்பூற கொப்புள் சிலந்தி யுண்டாகி
எந்த இடமும் அலைந்தழிவார் என்னாணை இது தப்பாதே

தப்பா தெனவே சாபமிட்டேன் சத்திபேரி லுண்மை யதாய்
எப்பா ரெல்லா மறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன்
ஒப்பா ரொருவ ரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாத னெழுதிவைத்த அகிலத் திரட்டம் மானையிதே

என்றே யிந்தத் திருவாசகம் இயம்பச் சரசு பதிமாது
கன்றே மேய்த்தோ னெழுதிமிகக் கலியுக மதிலே விட்டிடவே
நன்றோர் மறையோ னிடமேகி நாட்டி லறியச் செய்யெனவே
அன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே           882

 
மேலும் அகிலத்திரட்டு அம்மானை! »
temple news
அய்யா துணை காப்பு ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணிகாரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - ... மேலும்
 
temple news
அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்துஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்துவேதியரும் நன்றாய் விளம்புவா ... மேலும்
 
temple news
கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும்இம்முதலா யுள்ள ஏற்ற ... மேலும்
 
temple news
தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக்கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும்தாட்டிமையாய்ச் ... மேலும்
 
temple news
பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன்மாலோ சனையிழந்து மாறியே மானிடவர்சாதி யினம்பிரித்துத் தடுமாறி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar