வைணவ மகான்களில் ஒருவரான சுவாமி தேசிகன், திருப்பதி ஏழுமலையானின் ஆராதனை மணியின் அம்சம் கொண்டவர். இவர் காஞ்சிபுரம் அனந்தசூரி, தோதாரம்மாள் தம்பதியருக்கு புரட்டாசி திருவோணத்தன்று மகனாக பிறந்தார். வேங்கடநாதன் என்பது இவரது இயற்பெயர். ‘அப்புள்ளான்’ என்னும் குருநாதரிடம் கருட மந்திர உபதேசம் பெற்று அதை ஜபம் செய்து கருடனின் தரிசனம் பெற்றார். கருடனிடம், ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசம் பெற்றார். அதை ஜபித்து ஹயக்ரீவரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றார். ஸ்ரீரங்கத்தில் தேசிகனுக்கும், பண்டிதர் ஒருவருக்கும் இடையில் யார் சிறந்தவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது அர்ச்சகர் ஒருவரின் மீது ஆவேசமாகத் தோன்றிய ரங்கநாதர், இன்றிரவு போட்டி நடத்துவது என்றும், விடிவதற்குள் யார் ஆயிரம் ஸ்லோகம் பாடுகிறாரோ அவரே வெற்றியாளர் என்றும், அவருக்கு ‘கவிதார்க்கிக சிம்மம்’ என்று சிறப்பு பட்டம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதன்படி பண்டிதர் ‘பத கமல சகஸ்ரம்’ என்னும் பெயரில் பெருமாளின் திருவடியைப் புகழ்ந்து பாடத் தொடங்கினார். அவரால் 300 ஸ்லோகம் மட்டுமே பாடமுடிந்தது. தேசிகனோ ரங்கநாதரின் பாதுகை பற்றி ‘பாதுகா சகஸ்ரம்’ என்னும் தலைப்பில் 1000 ஸ்லோகங்கள் பாடி முடித்தார். போட்டியில் வென்ற தேசிகனுக்கு பட்டம் அளிக்கப்பட்டது. அந்நியப் படையெடுப்பின் போது, ஸ்ரீரங்கத்தின் உற்ஸவரான நம்பெருமாளை (வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் கடப்பவர்) பாதுகாத்த பெருமை இவருக்குண்டு. முதுமைக் காலம் வரை மகான் பிள்ளை லோகாச்சாரியாருடன் சேர்ந்து ரங்கநாதருக்கு தொண்டாற்றினார். சிற்பக்கலையில் கைதேர்ந்த இவர், தன் உருவத்தை தானே சிலையாக வடித்தார். இந்தச் சிலை கடலுார் மாவட்டம் திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் கோயிலில் உள்ளது. வடமொழி ஸ்தோத்திரங்கள், தனியன் பாடல்கள், வாழி திருநாமங்களை இவர் பாடியுள்ளார். 100 ஆண்டுகள் வாழ்ந்த இவர், ராமானுஜரின் கொள்கைகளை விளக்கி நுால்கள் இயற்றினார். இவரது காலத்திற்குப் பின்னர் 12 சீடர்கள் இவரது கொள்கைகளை மக்களிடையே பரப்பினர். இவரது குருபூஜை புரட்டாசி திருவோணத்தன்று............. நடக்கிறது. மாணவர்கள் இவரை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவர்.