பதிவு செய்த நாள்
14
அக்
2021
01:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில், தேரோட்டம் நடக்குமா? என்பது தெரியாத நிலையில், தேர் பழுது பார்க்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ., 10ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 16ல், மகாரத தேரோட்டம், 19ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழா பூர்வாங்க பணிகள் தொடங்க கடந்த, செப்., 16ல், பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதையடுத்து, விழாவில் வீதி உலா வரும் வாகனங்கள் பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல், அழைப்பிதழ் அச்சடித்தல், தேர் பழுது பார்த்தல் உள்ளிட்ட அனைத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக கடந்தாண்டு, தீப திருவிழாவில் சுவாமி மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. மகா ரத ஓட்டம் நடக்கவில்லை. இந்த ஆண்டு மகா ரத ஓட்டம் நடக்குமா, நடக்காதா என்பது தெரியாத நிலையில், கோவில் நிர்வாகம் தேர் பழுது பார்க்கும் பணியை தொடங்கியுள்ளது.