திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்ஸவம் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது.
திருமலையில் ஏழுமலையானுக்கு கடந்த ஒன்பது நாட்களாக வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று தீர்த்த வாரியுடன் பிரம்மோற்ஸவம் நிறைவடைந்தது. ஏழுமலையான் சன்னதி முன் உள்ள கண்ணாடி மண்டபத்தில் நேற்று காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாரை எழுந்தருளச் செய்தனர். பால், தயிர், தேன், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல பொருட்களை திருமலை ஜீயர்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர, அர்ச்சகர்கள் உற்ஸவ மூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தி வைத்தனர். திருமஞ்சனம் நிறைவடைந்த பின் கண்ணாடி மண்டபம் முன் ஏற்படுத்தப்பட்ட சிறிய குளம் போன்ற இடத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அதன்பின் மாலை பிரம்மோற்ஸவம் நிறைவு அடைந்ததற்கு அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்பட்டது.