பதிவு செய்த நாள்
22
அக்
2021
01:10
உடன்குடி: குலசேகரன்பட்டணம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த குலசேகரன்பட்டணம் அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்டபாண்டீஸ்வரர் கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், புராதன பெருமைகள் பல கொண்டதுமான இக்கோயிலில் ஆண்டு தோறும் 12 நாட்கள் நடக்கும் ஐப்பசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், கொடிப்பட்டம் ஊர்வலம் நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரம் , நந்தியம்பெருமாள், பலிபீடம் ஆகியவற்றிற்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கொடிமரம், பலிபீடம், நந்தியம்பெருமாளுக்கு பல்வேறு வகையான தீபாராதனைகள் பிரசாதம் வழங்கல் நடந்தது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்,வழிபாடுகள் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்வான அறம் வளர்த்த நாயகிக்கு திருமாங்கல்ய தாரணம் திருமங்கல நாண் பூட்டுதல் வரும் நவ.2ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் உத்திர சத்திரத்தில் நடக்கிறது.