பதிவு செய்த நாள்
22
அக்
2021
02:10
திரிசூலம் சிவன் கோவிலுக்கு சொந்தமான, பல 100 கோடி ரூபாய் மதிப்பிலான, 83.26 ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு உள்ளது.
இதை மீட்க, ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கோவில் சொத்துகளை மீட்பதுடன், ஆக்கிரமிப்பாளர்கள், அதற்கு துணை போனவர்கள் மீது, அறநிலையத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்திரம் பாழ்சென்னை, திரிசூலத்தில் அமைந்துள்ளது திரிச்சுரமுடையார் எனும் திரிசூலநாதர் கோவில். இக்கோவில் மூலவராக திரிசூலநாதரும், உற்சவராக சந்திரசேகரரும், அம்பாளாக திரிபுரசுந்தரியும் அருள்பாலிக்கின்றனர்.
பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு சொந்தமாக, 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பட்டா நிலம் உள்ளது. கோவிலை சுற்றி 83.26 ஏக்கர் நிலம் உள்ளது.அதில் வரும் வருமானம் வாயிலாக, கோவிலின் நித்ய பூஜைகள், திருவிழாக்கள், கோவில் முகப்பில் உள்ள சத்திரத்தில் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டு வந்தன.சில ஆண்டுகளுக்கு முன், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் வந்த பின், வழக்கமான நிர்வாக குளறுபடி காரணமாக, கோவிலின் பாரம்பரியம் சிதைந்து போனது. அன்னச்சத்திரங்கள் பாராமரிக்கப்படாமல் பாழடைந்தன.கோவிலுக்கு சொந்தமான நிலங்களில், 21 ஏக்கர் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. மீதமுள்ள 62 ஏக்கர் தரிசு நிலமாக இருந்தது. பின், உள்ளூர் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி, கோவில் நிலம் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளைபோனது.கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் பட்டா நிலம், கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கோவில் நிலத்தை மீட்கக் கோரி, சேவியர் பெலிக்ஸ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.விபரம் வேண்டும்அப்போது, கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்; கோவில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்ட விபரங்கள் குறித்து, அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, இது குறித்த தகவல்களை விரிவாக தயாரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நடவடிக்கையில், அறநிலையத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து, ஆன்மிக நல விரும்பிகள் கூறியதாவது:திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்துார் வட்டம், திரிசூலம் வருவாய் கிராமத்தில், புல எண் 29 முதல், 97 வரை, 83.26 நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன.இதில், 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், ஆக்கிரமிப்பாளர்களால் கூறு போட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவில் பட்டா நிலத்தை, வெறும் 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த கோவில் நிர்வாகம், ஊராட்சி, மின் வாரியம் ஆகியவை இந்த முறைகேடிற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளன.ரூ.100 பத்திரம்ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில், சகல வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து பல கட்டுமானங்கள் நடந்து வருகின்றன. அந்த கோவில் நிலத்தை மீட்க தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.தற்போது, ஹிந்து சமய அறநிலையத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணி சிறப்பாக நடக்கிறது. அதன்படி, ஏராளமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுஉள்ளன. அதே போல், திரிசூலநாதர் கோவில் நிலமும், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து முழுமையாக மீட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில், அறநிலையத்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு, அதிகாரிகள் தலைமையில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி விரைவில் துவங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இவ்வாறு அவர்கள் கூறினர்.