பதிவு செய்த நாள்
24
அக்
2021
03:10
கும்பகோணம்,- கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கிரிஜாம்பிகை, பிறையணி அம்பாள் சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவக்கிரகங்கள் முக்கியமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளோடு மங்கள ராகுவாக அருள்பாலித்து வருகிறார். ராகுதோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மேலும், ராகு கால பூஜையின் போது ரகுபகவானின் சிலைக்கு பாலபிஷேகம் செய்யும் போது, அந்த பால் நீலநிறமாக மாறி வருவது இன்றளவும் காணப்படுகிறது. இக்கோவில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, 5 கோடி ரூபாய் செலவில், 7 ராஜகோபுரங்கள், 13 பரிவார தெய்வ விமானங்கள் திருப்பணிகள் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 18-ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் துவங்கியது. தொடர்ந்து ஆறு கால யாகசாலை பூஜைகளுக்காக, 22,500 சதுரஅடி பரப்பளவில் யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு, 37 வேதிகைகளும், 108 குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 250 சிவாச்சாரியார்கள், 40 ஓதூவார்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகளை நடத்தினர்.பின்னர் காலை ஆறுகால பூஜைகள் முடிந்து,7 மணிக்கு 13 பரிவார தெய்வ விமானங்களுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர், யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு அனைத்து விமானம் மற்றும் ராஜ கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிவேந்தன் தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.