கோவை:துாய்மை என்ற நல்ஒழுக்கத்தை கொரோனா வாயிலாக மனிதன் கற்றுக்கொண்டான், என, ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் சுவாமி கூறினார்.
கோவைக்கு வருகை தந்த சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிக்கு, பெரியகடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் பக்தர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க பூர்ணகும்ப மரியாதை செய்தனர். அப்போது ஜீயர் சுவாமி கூறியதாவது:கொரோனா எனும் பெருந்தொற்று, நம் வாழ்வில் அகத்துாய்மை, புறத்துாய்மை ஆகியவற்றை ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வழிவகை செய்துள்ளது. நாம் அதிகாலை மேற்கொள்ளும் அகத்துாய்மை, அதன் பின் மேற்கொள்ளும் புறத்துாய்மை, இறைவனை வழிபடும்போது ஏற்படும் மனத்துாய்மை ஆகியவற்றை பரிபூரணமாக பின்பற்ற, கொரோனா வழிகாட்டியது.துாய்மை என்ற நல் ஒழுக்கத்தை, கொரோனா வாயிலாக மனிதன் கற்றுக்கொண்டான். எப்போதுமே துாய்மையை பின்பற்றினால், எந்த நோயும் நெருங்காது.இறைவனுக்கு மிகவும் பிடித்தது நாமசங்கீர்த்தனம். கலியுகத்தில் உபன்யாசம், நாமசங்கீர்த்தனத்தோடு மக்கள் இணைய வேண்டும். இவ்வாறு ஜீயர் சுவாமி கூறினார்.திரளான பக்தர்கள் ஆசிபெற்றனர்.