பதிவு செய்த நாள்
26
அக்
2021
08:10
மேட்டுப்பாளையம்: அயோத்தி ராமர் கோவிலில், வைக்கப்பட உள்ள உற்சவர் சுவாமி சிலைகளுக்கு, காரமடை ஐயப்பன் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டது.
அயோத்தியில் புதிதாக கட்டப்படும் ராமர் கோவிலுக்கு, சென்னையில் ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய நான்கு உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. ராமர் சிலை இரண்டேகால் அடியிலும், சீதை, லட்சுமணன் சிலைகள் இரண்டு அடியிலும், ஆஞ்சநேயர் சிலை ஒரு அடியிலும் என, ஐம்பொன்களால் இந்த சுவாமி சிலைகள் செய்யப்பட்டன. இந்த சுவாமி சிலைகள், தமிழகம் முழுவதும், 25 கோவில்களில் வைத்து அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து, நேற்று காரமடையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, இந்த நான்கு சுவாமி சிலைகளும் கொண்டு வரப்பட்டன. கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் சுவாமி சிலைகளுக்கு செய்யப்பட்டன. இப்பூஜையில் சுவாமி சிலைகளை கோவில்களுக்கு எடுத்துச் செல்லும் அமைப்பின் நிர்வாகி ஆறுமுகம் மற்றும் பாலசுப்பிரமணியன் உட்பட, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இந்த சிலைகள் தமிழகத்தில் மேலும் பல்வேறு கோவில்களில் வைத்து பூஜை செய்த பின்பு, நவம்பர் மாதம் ராமேஸ்வரம் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட உள்ளது.