தேனி வேதபுரி ஆஸ்ரமத்தில் ரூ 2.90 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2021 11:10
தேனி: தேனி வேதபுரி சுவாமி சித்பவானந்த ஆஸ்ரமத்தில் 2.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏழு ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. திருடர்கள் விட்டுச் சென்ற இரண்டு சிலைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
தேனி அரண்மனைப்புதுார் வயல்பட்டி ரோட்டில் வேதபுரி ஸ்ரீ சுவாமி சித்பவானந்த ஆஸ்ரமம் உள்ளது. இதன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தட்சிணாமூர்த்தி கோவிலில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தாயுமானவர் 1 அடி, மாணிக்கவாசகர் 1.5 அடி ஐம்பொன் சிலைகள் 2004ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தலா முக்கால் அடி உயரமுள்ள வேதவியாசர், ஸநகர், ஸநாதனர், ஸனந்தர், ஸாந்தக்குமாரர், அரை அடி உயரமுள்ள நந்திகேஸ்வரர், கால் அடி உயரமுள்ள பலிபீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ஆஸ்ரமத்திற்கு அருகே உள்ள வனத்துறை நாற்றாங்கால் பண்ணை வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து, மூலவர் தட்சிணாமூர்த்தி கோவில் பின்புற சுவரில் உள்ள கண்ணாடியை உடைத்து, அங்கிருந்த உண்டியலுடன் ஐம்பொன் சிலைகளை திருடி சென்றனர். இது குறித்த புகார்படி தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரே ஆய்வு செய்தார். திருடர்களை பிடிக்க இரு தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். நாற்றாங்கால் பண்ணையில் திருடர்கள் விட்டு சென்ற வேதவியாசர், பலிபீடம் உட்பட இரு சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசாரும் விசாரிக்கின்றனர்.