பதிவு செய்த நாள்
28
அக்
2021
09:10
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவ.,4 - 9 வரை கோலாட்ட உற்ஸவம் நடக்கிறது. தீபாவளியன்று அம்மனுக்கு வைரகிரீடமும், தங்ககவசமும், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் சாத்துப்படியாகிறது.
அக்.,31 அன்று ஐப்பசி பூரம் நடக்கிறது. அன்று காலை 10:00 மணியளவில் அம்மனுக்கும், உற்ஸவ அம்மனுக்கும் ஏற்றி இறக்குதல் சடங்கு நடக்கிறது. நவ.,4 முதல் 9 வரை கோலாட்ட உற்ஸவ நாட்களில் தினமும் மாலை 6:00 மணியளவில் அம்மன், ஆடி வீதியில் எழுந்தருளி சுற்றி வந்து மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பக்தியுலாத்தி பின் கொலுச்சாவடி சேத்தியாகும். நவ.,8 மாலை 6:00 மணிக்கு அம்மன் வெள்ளி கோ ரதத்தில் ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார். நவ.,9 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.
கந்தசஷ்டி: இந்த உற்ஸவம் நவ.,4 முதல் 9 வரை நடக்கிறது. நவ.,10 காலை 7:00 மணிக்கு கூடல்குமாரருக்கு வெள்ளிகவசம் சாத்துபடியாகி அபிேஷக அலங்காரம், சண்முகார்ச்சனை நடக்கும். நவ., 4 முதல் 10 வரை உபயதாரர் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா கிடையாது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் செல்லத்துரை செய்து வருகின்றனர்.
உண்டியல் திறப்பு: இக்கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல் நேற்று எண்ணப்பட்டன. ரொக்கமாக மொத்தம் ரூ.54 லட்சத்து 38 ஆயிரத்து 266, தங்கம் 323 கிராம், வெள்ளி 815 கிராம், 34 வெளிநாட்டு நோட்டுகள் கிடைக்க பெற்றன.