பதிவு செய்த நாள்
04
ஜூலை
2012
10:07
விழுப்புரம்: கல்குவாரியை விரிவுப்படுத்த, அம்மனின் பாதச் சுவடை வேறு இடத்திற்கு மாற்றியதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், காணை பகுதியில் உள்ள கல்குவாரிக்கு செல்லும் வழியில், பழமைவாய்ந்த அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள அம்மனின் பாதச் சுவடு கல்குவாரிக்கு நடுவே அமைந்திருந்தது. ஆண்டுதோறும் ஊர் மக்கள் அம்மனின் பாதச் சுவடு அருகே பொங்கல் வைத்து படையலிட்டு, திருவிழா கொண்டாடி வந்தனர். இந்நிலையில், பாதச் சுவடு உள்ள இடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த ரவி, கல்குவாரி நடத்தி வருகிறார். இதனை காணையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் பராமரித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் கல்குவாரி நிர்வாகத்தினர், அம்மனின் பாதச்சுவடு இருந்த பாறையை இயந்திரத்தின் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினர்.
நள்ளிரவு பூஜை: அதன் பின் குவாரியில் கற்களை வெட்டும் போது, முறையான வடிவம் கிடைக்காமல் கற்கள் அனைத்தும் உடைந்தது. இதனால் பீதியடைந்த நிர்வாகத்தினர், குவாரிக்கு அருகிலேயே அம்மனின் பாதச் சுவட்டிற்கு புதிய கோவிலை கட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் பூஜை நடத்தினர். தகவலறிந்த காணை கிராம மக்கள், கல்குவாரி நிர்வாகத்தினரை பூஜை செய்ய விடாமல் தடுத்தனர். அம்மனின் பாத சுவட்டினை வேறு இடத்திற்கு மாற்றியதால், தங்கள் ஊரில் அசம்பாவிதங்கள் நடப்பதாக கூறி பிரச்னை செய்தனர். தகவலறிந்த காணை போலீசார், சமாதானம் செய்தனர். இதையடுத்து பூஜை பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், குவாரி நிர்வாகத்தினர், திடீரென நேற்று காலை 7 மணிக்கு புதிதாக கட்டப்பட்ட கோவிலில், யாகம் நடத்தி, பூஜை செய்தனர். இதனையறிந்த கிராம மக்கள் திரண்டு, குவாரி நிர்வாகத்தினர் மற்றும் பூசாரிகளை தாக்க முயற்சித்தனர். காணை இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அம்மனின் பாதச்சுவடு உள்ள கோவிலில், குவாரி நிர்வாகத்தினர் மேற்கொண்டு பராமரிப்பு செய்யக் கூடாது. பொதுமக்கள் வழக்கம் போல் பூஜை செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது.